கோவில் நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் அனுமதி தேவையில்லை.. ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு
மதுரை: கோவில்களில் நடத்தப்படும் நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.
விருதுநகர் திருச்சுழி அடுத்துள்ள வலையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பட்டு அரசி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்தக் கோவில் திருவிழா பல ஆண்டுகளாக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளில் திருவிழா நடத்த அனுமதி கோரி ஊர் மக்கள் காவல் நிலையத்தில் விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்பித்துப் பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் போலீசார் இதுவரை பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து திருவிழா நடத்த உரிய அனுமதி அளிக்கக் கோரி ஊர் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோவில் திருவிழா நடத்த அனுமதி அளித்தார்.
கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தெரிவித்தனர்.
கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருந்தால் அல்லது ஸ்பீக்கர்கள் வைப்பது, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் மட்டுமே போலீசார் அனுமதி தேவை என்றும் தெரிவித்தார்.
இந்த குறிப்பிட்ட வழக்கில் கிராம மக்கள் அனைவரும் விழாவை நடத்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர் என் குறிப்பிட்ட நீதிபதி, இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டார்.