விவசாயிகளுக்கு பிரச்சனைனா.. எந்த தியாகத்தையும் செய்ய அதிமுக அரசு தயார்… இபிஎஸ் பேச்சு
மதுரை: விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு விவசாய மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை தந்து வருகிறது என்றும், தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி நிகழ்ந்துள்ளதாகவும் கூறினார்.
தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட பரபரப்பு அறிக்கை.. ரத்தாகிறதா வேலூர் தேர்தல்?
திட்டங்கள் நிறைவேற்றம்
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து வருகிறார் என்றும் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் விளக்கமளித்தார். அதுபோல இப்போது நாங்கள் சொல்கிற திட்டங்களை நிச்சயம் செய்து முடிப்போம் என்றும் உறுதியளித்தார்.
சாதிக் பாட்ஷா மர்ம மரணம்
திமுகவை தவிர மற்ற எந்த கட்சியும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறி வருகிறார் என்றும், திமுக ஆட்சியில் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட பலரும் மர்மமான முறையில் உயிரிழந்தது உள்ளிட்ட அனைத்து கொலைகளையும் தோண்டியெடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
திமுக தான் காரணம்
தான் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, 35,000க்கும் மேற்பட்ட போராட்டங்களை சந்தித்திருப்பதாகவும், அவை அனைத்தும் தி.மு.க.,வின் தூண்டுதலின் பேரிலேயே நடந்ததாகவும் முதலமைச்சர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம்
உலக பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை மீட்டு தந்தது அ.தி.மு.க. அரசு என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், தானும் ஒரு விவசாயி என்ற முறையில், விவசாயிகள் வாழ்வு செழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
விவசாயிகளுக்காக தியாகம்
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், இதற்காக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அணையை மேலும் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார். அணையை பலப்படுத்தும் பணிக்கு கேரள அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது என்று விளக்கம் அளித்த அவர், விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.