கதிகலங்க வைக்கும் ‘காய்ச்சல்’! நிரம்பி வழியும் மருத்துவமனைகள்! ‘இந்த’ அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?
மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சாதாரண காய்ச்சல் முதல் டெங்கு, ஸ்வைன் ப்ளு, வைரஸ் காய்ச்சல் என மக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு என 100 படுக்கை வசதியுடன் வார்டு தயார் நிலையில் வைத்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் தற்போது இன்ஃப்ளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்ஃப்ளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இதுகுறித்து பயப்பட வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இன்ஃப்ளுயன்சா
இது போன்ற அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவக் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடனடி சிகிச்சை
குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், அரசு அறிவுறுத்தியுள்ளது.

அச்சம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களாக சாதாரண காய்ச்சல் முதல் டெங்கு, ஸ்வைன் ப்ளு, வைரஸ் காய்ச்சல் என நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 4 பேருக்கு ஸ்வைன் ப்ளு, 9 பேருக்கு கொரோனா, 6 பேருக்கு டெங்கு வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் 30 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மொத்தம் 50 பேர் காய்ச்சல் வார்டில் சிகிச்சையில் உள்ளனர்.

தென் மாவட்டங்கள்
இந்த நிலையில் இன்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புற நோயாளிகள் பிரிவில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு என 100 படுக்கை வசதியுடன் வார்டு தயார் நிலையில் வைத்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதே நிலை தான் நீடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications