சிக்கிய புள்ளிகள்.. ‘அடுத்த குறி’- கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள் - எடப்பாடிக்கு செக் வைக்கும் டெல்லி!
மதுரை : அடுத்தடுத்து ஒப்பந்ததாரர்கள் ஐடி ரெய்டில் குறிவைக்கப்பட்டிருப்பதால், அவர்களோடு தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் பலர் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2வது நாளாக பரபர ரெய்டு.. கான்டிராக்டர்களின் அலுவலகங்களில் சல்லடை போடும் ஐடி அதிகாரிகள்..!
இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கிலியில் உள்ளனராம்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடத்தி அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு எதிராகச் செயல்பட்ட ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் எடப்பாடி. அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கிலும் சாதகமான தீர்ப்பு கிடைத்து சாவி எடப்பாடி பழனிசாமியிடமே வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வரிசை கட்டும் சிக்கல்கள்
கட்சியில், தனக்கு சாதகமான விஷயங்கள் வரிசையாக நடந்து கொண்டிருந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரச்சனைகளும் வரிசைகட்டி வருகின்றன. கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. ஐ.டி ரெய்டு ஒருபக்கம், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு ஒருபக்கம், போதாக்குறைக்கு குட்கா ஊழல் வழக்கையும் மத்திய அரசின் சிபிஐ மீண்டும் கையில் எடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடுக்க சிபிஐ அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
ஐடி ரெய்டு
எடப்பாடி பழனிசாமியின் வலது கையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரான வடவள்ளி சந்திரசேகர், எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு நெருக்கமான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த காண்டிராக்டர் செய்யாதுரை ஆகியோர் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்துள்ளனர். இவர்கள் தொடர்புடைய இடங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை தொடர்ந்து சோதனை நடத்தி 500 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.
மீண்டும் அதிரடி சோதனை
இந்நிலையில், மதுரை, திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றும் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கேம்ப் போட்டு அதிரடி ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் உள்ள கிளாட்வே, அன்னை பாரத் சிட்டி, கிளாட்வே கிரீன் சிட்டி நிறுவனம் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள சில நிறுவனங்களை நடத்தும் ஒப்பந்ததாரர்கள் கடந்த அதிமுக ஆட்சியின்போது தலைமைக்கும், சில அமைச்சர்களுக்கும் நெருக்கமான இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மதுரையில்
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் பால்சாமி மற்றும் அவரது மகன்கள் மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் கட்டுமான நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தொடர் புகார்கள் வந்த நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
முக்கிய ஆவணங்கள்
பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்ன கரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 2 குவாரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியின் எச்சரிக்கை
வரிசையாக அதிமுகவுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் பலர் வருமான வரித்துறை ரெய்டுக்கு உள்ளாகியிருப்பது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமான வரித்துறை, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் மீது ரெய்டு நடத்துவது டெல்லி, ஈபிஎஸ்ஸுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஓபிஎஸ் தூண்டுதலின் பேரில் இந்த ரெய்டு நடந்து வருகிறது என்றும் எடப்பாடி தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
‘கிலி’யில் முன்னாள் அமைச்சர்கள்
முந்தைய அதிமுக ஆட்சியில் ஏகபோகமாக காண்டிராக்ட் எடுத்து பணி செய்த ஒப்பந்ததாரர்கள் அடுத்தடுத்து சிக்கி வருவதால், அடுத்து வருமான வரித்துறையின் குறி முன்னாள் அமைச்சர்கள் பக்கம் திரும்பலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், இந்த நிறுவனங்களோடு தொடர்பு கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் இருந்து வருகின்றனராம்.