புதிய கட்சி தொடங்குவது பற்றி இன்னும் ஆலோசிக்கவில்லை... மவுனம் கலைத்த மு.க.அழகிரி...!
மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவெடுப்பேன் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
பல மாதங்களுக்கு பிறகு தனது மவுனத்தை கலைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் தன்னை விட்டு விலகவில்லை என்றும் தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக தன்னுடைய ஆதரவாளர்களை தாம் சந்திக்கவில்லை என்றும் விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். அப்போது புதிய கட்சி தொடங்குவதா இல்லை வேறு யாருக்கும் ஆதரவு அளிப்பதா என்பது பற்றி முடிவெடிக்கப்படும் என மு.க.அழகிரி கூறியிருக்கிறார்.
திமுகவில் தற்போது புகைச்சல் அதிகமாகிவிட்டதாகவும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுகவின் நிலையை நீங்களே அறிந்துகொள்வீர்கள் எனவும் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் திமுக மீதும் தனது சகோதரர் ஸ்டாலின் மீதும் அவருக்கு இருக்கும் கோபம் குறையவில்லை என்பது வெளிப்படுத்தியிருக்கிறார்.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரது மறைவுக்கு பிறகும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் பயன்படுத்திய வெற்றிடம் என்ற வார்த்தையை மு.க.அழகிரியும் இப்போது பயன்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் ரஜினியுடன் அழகிரி கரம் கோர்க்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே திமுகவில் தற்போது உள்ள தலைவர்கள் பதவிக்காகவே இருக்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications