“இதுல தான் ஸ்பெஷலிட்ஸ்ட்டே”.. தொலைந்த செல்போன்களை மீட்பதில் மாஸ் காட்டும் மதுரை காவல்துறை!
மதுரை: தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து தருவதில் மதுரை மாவட்ட காவல்துறை முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் CEIR தளத்தின் மூலம் பொதுமக்களின் புகார்களை விரைவாக பதிவு செய்து, தொலைந்த மொபைல் சாதனங்களை மீட்டுத் தருவதில் மாநில அளவில் மதுரை மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதுரை மாவட்ட காவல்துறை மக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் மாநிலத்திலேயே முன்னிலையில் இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களிடம் ஏற்பட்ட நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் தொலைந்து போன மொபைல் சாதனங்களை துரிதமாக மீட்கும் நடவடிக்கைகளில் மதுரை மாவட்ட காவல்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற்றுள்ளது.

இந்த சிறப்பிற்கு காரணம் CEIR - Central Equipment Identity Register (மத்திய சாதன அடையாளப் பதிவேடு). CEIR என்பது தொலைபேசி திருட்டு அல்லது தொலைந்துபோன மொபைல் சாதனங்களை அடையாளம் காணவும், அவற்றின் சேவைகளை முடக்கவும் பயன்படும் மத்திய தரவுத்தள அமைப்பு ஆகும். இது இந்திய அரசின் தொலைதொடர்பு துறையால் தொடங்கப்பட்ட ஒரு தேசிய முயற்சி ஆகும்.
இந்த CEIR தளம் IMEI (International Mobile Equipment Identity) எண்ணை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. இதன் மூலம் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் சாதனங்களை உடனடியாக முடக்கலாம். சாதனம் மீண்டும் கிடைத்தால் சேவையை மீண்டும் செயல்படுத்தலாம். போலியான IMEI எண்களை கொண்ட சாதனங்களை அடையாளம் காணலாம்.
தமிழகத்தில் இந்த CEIR தளத்தின் மூலம் பொதுமக்களின் புகார்களை விரைவாக பதிவு செய்து, தொலைந்த மொபைல் சாதனங்களை மீட்டுத் தருவதில் மாநில அளவில் மதுரை மாவட்டம் முதல் இடத்தையும், காவல் நிலையம் வாரியாக உசிலம்பட்டி காவல் நிலையம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
இதற்காக இந்திய அரசின் தொலைதொடர்பு துறை சார்பில் வழங்கப்படும் DOT-CEIR சிறந்த செயல்பாட்டுக்கான இந்த விருதை தமிழக அரசின் காவல்துறை கூடுதல் இயக்குநர் (ADGP Cyber Crime) சந்தீப் மிட்டல் வழங்கி பாராட்டினார். இந்த அங்கீகாரம், மதுரை மாவட்ட காவல்துறை தமது தொழில்நுட்ப நுண்ணறிவு, மக்களுடன் கொண்டுள்ள நெருக்கம் மற்றும் துரிதமான காவல் நடவடிக்கைகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கூறுகையில், "இதுபோன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை மேலும் வலுப்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவைகள் தொடர்நது வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications