EXCLUSIVE: நான் மீண்டும் பாஜகவிலா? மதுரை திமுகவில் கேட் போடும் 3 பேர்! ஓபனாகப் பேசிய டாக்டர் சரவணன்!
மதுரை : மீண்டும் பாஜகவில் சேரும் எண்ணம் தனக்கு துணியும் இல்லை எனவும்.. அதே நேரத்தில் திமுக தலைமை தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள விரும்பினாலும் மதுரை மாவட்டத்தில் மூன்று பேர் தடையாக இருப்பதாக பிரபல மருத்துவரும் முன்னாள் பாஜக மதுரை மாவட்ட தலைவர் ஆன டாக்டர் சரவணன் அதிரடியாக கூறியிருக்கிறார்.
காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லெட்சுமணனின் உடல் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த வந்த போது பாஜகவினருடன் மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அப்போது பாஜகவினர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து திரும்பிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர்.

மதுரை சரவணன்
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், காவல்துறையினர், அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து அமைச்சரின் கார் அங்கிருந்து சென்றது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அன்று இரவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். இதனையடுத்து பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ஓபிஎஸ் உடன் ஐக்கியம்?
இதனை அடுத்து திமுகவில் சரவணன் சேரப் போவதாக அடுத்தடுத்து யூகங்கள் பரவின. மேலும் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தி சில பாஜக முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் டாக்டர் சரவணன் திமுகவின் இணைவார் என கூறப்பட்டது. அதற்கேற்றார் போல் சில பாஜக நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர். அதே நேரத்தில் சொன்னது போல மாநாடு அல்லது அதிகாரப்பூர்வ இணைப்பு போன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை.

ஓபிஎஸ் அணி
இந்த நிலையில் மதுரை டாக்டர் சரவணன் ஓபிஎஸ் அருகில் இணையப் போவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. அவரது இல்ல விழாவில் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அதை உறுதி செய்வதாக உள்ளூர் பிரமுகர்கள் கிளப்பி விட்டனர். அதற்குப் பிறகாக மதுரை டாக்டர் சரவணன் பாஜகவில் மீண்டும் இணைய போவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் யூகங்கள் இறக்கை கட்டி பறந்தன. இதனால் திமுக பாஜக ஓபிஎஸ் அணியினர் அவர் எந்த பக்கம் செல்ல போகிறார் என்பது குறித்த விவாதங்கள் மதுரை அரசியல் வட்டாரத்தில் வெகுவாக பேசப்பட்டது .

நிலைப்பாடு என்ன?
இந்த நிலையில் தனது நிலைப்பாடு குறித்து மதுரை டாக்டர் சரவணன் தெளிவாக பேசி இருக்கிறார். ஒன்இந்தியா தமிழ் சார்பாக மதுரை சரவணன் தொடர்பு கொண்டு 'நீங்கள் மீண்டும் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் உலாவுகிறது அது உண்மையா? என கேட்டபோது அப்படியெல்லாம் இல்லை இனிமேல் பாஜகவில் இணைவதற்கான எண்ணம் துளியும் இல்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார். இதன் மூலம் அவர் பாஜகவில் இணையப் போகிறார் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திமுகவில் தடை
அடுத்ததாக விரைவில் திமுகவில் நீங்கள் இணையப் போகிறீர்கள் என்று ஆகஸ்ட் மாதம் முதலே பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை அதற்கான அறிகுறிகள் இல்லை. திமுகவில் இணைவதற்கான தடைகள் என்ன? எனக் கேட்டபோது,"மதுரை திமுகவை பொருத்தவரை மூன்று பேர் தான் கட்சியில் இணைவதற்கு தடைக்கல்லாக இருக்கின்றனர். மணிவண்ணன், தளபதி, மூர்த்தி ஆகியோர் மாவட்ட செயலாளராக இருப்பதால் கட்சியில் நான் சேர்வதற்கு தடை போட்டு வருகின்றனர். ஆனால் திமுக தலைமை நான் கட்சியில் இணைய வேண்டும் என விரும்புகிறது. கட்சிக்குள் நான் வந்தால் எனக்கு முக்கியத்துவம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் நான் கட்சிக்குள் வருவதை சிலர் விரும்பவில்லை. மாவட்ட செயலாளர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. என்பதால் தற்போது தள்ளிப் போயிருக்கிறது. விரைவில் அதற்கான நல்ல செய்தி வரும்" எனக் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைவதாக தகவல் வருகிறது என்ற கேள்விக்கும் அப்படி எல்லாம் இல்லை நாளை விரிவாக பேசுவோம் என உறுதியாக கூறியிருக்கிறார் மதுரை டாக்டர் சரவணன்.












Click it and Unblock the Notifications