அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவரை கொன்ற மனைவி.. இதுதான் காரணம்.. ஷாக்கான மேலூர்!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி தெற்குவளவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக உள்ளார். இவரது மனைவி ஷீலா. இவர்களுக்கு விஜயதர்ஷினி, விஜயராமன் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
மேலூர் அருகே எம்.மலம்பட்டியில் தனியாக சொந்த வீட்டில் குடியிருந்து வருகின்றனர். மணிகண்டன் அடிக்கடி குடிபோதையில் வந்து மனைவி ஷீலாவுடன் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அம்மிக்கல்லை தலையில் போட்டு...
இதற்கிடையே மணிகண்டன் இறைச்சி வாங்கி மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்லியுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த அவர் மனைவியுடன் கடும் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஷீலா வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து கணவரின் தலையில் போட்டுள்ளார், இதில் தலை முற்றிலும் சிதைந்து சம்பவ இடத்திலேயே மணிகண்டன்உயிரிழந்தார்.

தப்பிச்சென்றார்
இதனைத் தொடர்ந்து மேலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த ஷீலா வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். தகவல் அறிந்தவுடன் மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் வீட்டின் கதவை உடைத்து மணிகண்டன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் கூறுவது என்ன?
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொலை குறித்த தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், 'மணிகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. மனைவி அவரை கண்டித்துள்ளார். ஆனால் இதனை மணிகண்டன் காதில் வாங்கி கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு முற்றியுள்ளது.

வலைவீச்சு
சம்பவத்தன்றும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறுதான் கொலையில் சென்று முடிந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் தப்பி ஓடிய ஷீலாவை போலீசார் தேடி வருகின்றனர். குடும்பத்தகராறு காரணமாக மனைவியே கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications