திமுக அரசின் செயல்பாடுகள் எப்படி? கோர்ட்டில் இருந்து வெளியே வந்த மு.க.அழகிரி பட்டென சொன்ன பதில்!
மதுரை : கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் வட்டாட்சியரை தாக்கிய வழக்கில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 19 பேர் இன்று நேரில் ஆஜராகினர். பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரியிடம் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஓட்டுக்கு பண பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வீடியோ எடுக்கச் சென்ற தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்துவை அழகிரி ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்பட்டது.
தாசில்தார் காளிமுத்து கொடுத்த புகாரையடுத்து, மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று அடுத்தகட்ட விசாரணை நடைபெறுகிறது.

தேர்தல் வாக்கு சேகரிப்பு
கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன. தேர்தலில் ஓட்டுக்கு மு.க.அழகிரி பண பட்டுவாடா செய்வதாக அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

அழகிரி ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார்
இதற்கு மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.கவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் திருஞானம் இறந்து விட்டார்.

நேரில் ஆஜர்
இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த வழக்கு நீதிபதி நீலாபானு முன்பாக விசாரணைக்கு வந்தபோது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட 20 பேர் நேரில் ஆஜராகினர்.
இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அழகிரி நேரில் ஆஜர்
இந்நிலையில், இன்றும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் தி.மு.க நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், செந்தில், கருப்பணன், பொன்னம்பலம், ராமலிங்கம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், சோலை, போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் ஒத்தப்பட்டி செந்தில் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

திமுக செயல்பாடுகள் எப்படி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வட்டாட்சியரை தாக்கியது தொடர்பான வழக்கை வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் வெளியில் வந்த மு.க.அழகிரியிடம் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி நீதிமன்றத்துக்குள் இது குறித்து பேசக்கூடாது என்று கூறிவிட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications