சீமான் காங்கிரஸில் சேர்ந்துவிட்டு இதை பேசட்டும்.. ‘ராகுல் அட்டாக்’ - நாராயணசாமி சொன்ன ‘வார்த்தை’!
மதுரை : ராகுல் காந்திக்கு பிரதமர் மோடியை எதிர்க்கும் தகுதி இல்லை என்கிற ரீதியில் சீமான் பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். ராகுலின் நடைபயணத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், ராகுல் நடைபயணம் பற்றிப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நரேந்திர மோடியை எதிர்க்க ஆள் வேண்டும், அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சீமான் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு.. சீமான் கடும் சீற்றம்.. விடியல் ஆட்சி இதுவா என கேள்வி!
சீமான் விமர்சனம்
அரை நூற்றாண்டு காலம் இந்தியாவை அவரது தாத்தா தொடங்கி காங்கிரஸ் ஆட்சி செய்து இருக்கும்போது வராத மாற்றத்தை ராகுல் கொண்டு வருவாரா? காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் செல்வது நடைபயணம் அல்ல அது நடைப்பயிற்சி, இதனால் வேண்டுமானால் மாற்றம் வரலாம் என்று சீமான் விமர்சித்தார். நரேந்திர மோடியை எதிர்க்க ஆள் வேண்டும், அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை என்றுன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்தார்.
சீமான் காங்கிரஸில் சேரட்டும்
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நாரயணசாமி, "ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்க தகுதியானவரா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் தான். சீமான் இல்லை. சீமான் எங்கள் கட்சியில் வேண்டுமானால் சேர்ந்துவிட்டு பிறகு பேசட்டும்." எனக் கூறியுள்ளார்.
ராகுல் டி-ஷர்ட்
மேலும் பேசிய நாராயணசாமி, ராகுல் போடும் டிஷர்ட் பற்றி பாஜகவினர் விமர்சிக்கிறார்கள். மோடி இத்தாலி, அமெரிக்காவில் லண்டனில் இருந்து வரும் உடைகளை போடுகிறார். எங்களை விமர்சனம் செய்ய பாஜகவுக்கு என்ன யோக்கிதை உள்ளது? ராகுல் காந்தியின் பாதயாத்திரை இந்திய மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய மாற்றத்தை தரும். ராகுல் தலைமை பொறுப்பை ஏற்க மாட்டேன் என சொல்லவில்லை. தேர்தல் வரும்வரை பொறுமையாக இருப்போம் என்றார்.
மதத்தின் பெயரால்
தொடர்ந்து பேசிய அவர், "மத்திய பாஜக அரசு மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மதக்கலவரம் உருவாக்கி அரசியல் லாபம் பெற நினைக்கிறது. மோடி ஆட்சியில் 23 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் சென்றுவிட்டனர். பணக்காரர்களுக்காக மோடி ஆட்சி செய்கிறார். இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை உள்ளது. இந்திய நாட்டின் அந்நியச் செலாவணி குறைந்து டாலர் மதிப்பு உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளோடு நல்ல உறவில்லாத நிலையை மோடி அரசு உருவாக்கி உள்ளது.
நேர்மையாகவா ஆட்சிக்கு வருகிறார்கள்?
2024 தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும். பாஜக அரசு எந்த மாநிலங்களிலும் நேர்மையாக ஆட்சிக்கு வருவதில்லை. மணிப்பூர், மேகலாயா, கர்நாடகா, புதுச்சேரியில் கூட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்ப்பது, பல ஆயிரம் கோடிகளை கொடுத்து ஆட்சியை கலைப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்களை பாஜக மேற்கொண்டது.
எதிர்க்கட்சிகள் மீது ஏவி விடுகிறார்கள்
ஜனநாயக படுகொலையை பாஜக செய்கிறது. ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது திட்டமிட்டு குறிவைத்து வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சிபிஐ ஆகிய அமைப்புகளை ஏவி சோதனை நடத்துகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
அண்ணாமலை
அண்ணாமலை முழுநேர அரசியல்வாதி கிடையாது. நாடு தற்போது என்ன வளர்ச்சிப்பாதையில் செல்கிறது? ஏற்கனவே இருந்த திட்டங்களை மோடி மாற்றியமைத்துள்ளார். இந்திய நாட்டிற்கு அனைத்தையும் செய்தது காங்கிரஸ் கட்சி தான். திமுக, காங்கிரஸை சாடுவதை தவிர அண்ணாமலைக்கு வேறு வேலை கிடையாது. வடமாநிலங்களை வேண்டுமானால் மோடியும், அண்ணாமலையும் ஏமாற்றலாம். ஆனால் தென் மாநில மக்களை பாஜகவால் ஏமாற்ற முடியாது." எனத் தெரிவித்தார்.