அமைச்சர் வீட்டு விருந்து.. வயிறார உண்டு, வாழைக்குலை, கரும்புகளையும் கட்டி தூக்கிச் சென்ற பொதுமக்கள்!
மதுரை : அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமண விழாவில் கட்டப்பட்டிருந்த கரும்பு மற்றும் வாழைக் குலைகளை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.
மதுரையில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகன் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டிருந்தன.
மதுரையைச் சேர்ந்த பத்திரப்பதிவு மற்றும் வணிவரித்துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் தியானேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ஸ்மிர்தவர்ஷினிக்கும் இன்று காலை திருமணம் நடந்தது. பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் இந்தத் திருமணம் நடைபெற்றது.
திருமண அரங்கத்துக்கு வரும் வழியில் ஆயிரக்கணக்கான கரும்புகளும், குலையுடன் வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன. இதனை திரும்பிச் செல்லும்போது மக்கள் எடுத்து சென்றுள்ளனர்.

பிரமாண்ட ஏற்பாடுகள்
மதுரை பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் திருமணம் நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தியின் இல்ல திருமண விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த இரு மாதங்களாகவே பாண்டி கோயில் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கோட்டை போன்ற பிரமாண்ட நுழைவு வாயில், மாநாடு போல லட்சம் பேர் அமரும் பந்தல், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் சாப்பிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இது தவிர விஐபிகள் சாப்பிடத் தனியாக டைனிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விஐபிகள்
இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த திருமண விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க அமைச்சர் மூர்த்தியின் மகன் தியானேஷ் மணமகளுக்குத் தாலி கட்டினார். இந்த திருமண நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், பல திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகளும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

மதுரையே மணக்க
திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஊரே வியக்கும் அளவுக்கு விருந்து அளிக்கப்பட்டது. சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு என தனித்தனியாகப் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் 2000 ஆடுகள், 5000 கோழிகள் அடிக்கப்பட்டு பிரியாணி உள்ளிட்ட அசைவ வகைகள் பரிமாறப்பட்டன. அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விருந்தால் மதுரையே மணத்தது எனச் சொன்னால் மிகையில்லை.

வாழைக்குலை, கரும்பு
மேலும், மொய் வசூலிப்பதற்காக சுமார் 50 ஹைடெக் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு தாம்பூலப்பைகளும் வழங்கப்பட்டன.
திருமண அரங்கத்துக்கு வரும் வழி நெடுக ஆயிரக்கணக்கான கரும்புகளும், குலை வாழைகளும் கட்டப்பட்டிருந்தன. இதனை திரும்பிச் செல்லும்போது மக்கள் எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.












Click it and Unblock the Notifications