ஆயிரக்கணக்கான மக்களின் கனவு, துக்கம், சந்தோஷம், காதலின் மெளன சாட்சி... பெரியார்!
மதுரை: மதுரை பெரியார் பஸ் நிலையம் குறித்த மதுரை மக்களின் எண்ணப் பகிர்வுகளின் தொகுப்பு நம்மிடம் வந்து குவியத் தொடங்கியுள்ளன.
மதுரையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத பல நினைவுகளை தேக்கிக் கொடுத்த பெருமைக்குரியது பெரியார் பஸ் நிலையம். அத்தகைய பஸ் நிலையம் தற்போது அதிநவீன பஸ் நிலையம் கட்டுவதற்காக டிஸ்மேன்டில் ஆகியுள்ளது.
இத்தனை காலமாக மதுரை மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக வலம் வந்த பெரியார் பஸ் நிலையில் விரைவில் அடையாளம் தெரியாமல் மாறப் போகிறது. இந்த நிலையில் நமது வாசகர்களிடமிருந்து வந்துள்ள எண்ணப் பகிர்வுகளில் சில உங்களுக்கு.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலிருந்து நமது வாசகர் ஸ்ரீவித்யா கண்ணன் பகிர்ந்துள்ளது..
ஞாபகம் வரும்.. (வரணும்)
பெரியார் பஸ் ஸ்டாண்ட்.. இந்த வார்த்தையைத் கேட்டவுடன் மதுரை சம்பந்தப்பட்ட எல்லா இடமும் ஞாபகம் வரும்.. (வரணும்.). பெரியார் வந்து இறங்கி அப்படியே நேதாஜி ரோடு வழியா நடந்தா மீனாட்சி கோயில், பெரியார் இறங்கி பஸ் நம்பர் ரூட் 5 பிடிச்சா திருப்பரங்குன்றம், பெரியார் இறங்கி காலாற நடந்தா ரயில்வே ஸ்டேஷன், எதுத்தாப்ல பிரேமா விலாஸ் அல்வா கடை, பக்கத்துல காலேஜ் ஹவுஸ் .. பெரியார் வந்துருங்க நான் வரேன் ... இப்படி எல்லாத்துக்கும் பெரியார் தான்.
இடியாப்பம் குருமாவுக்காக
ஷேர் ஆட்டோ, ஓலா லாம் இல்லாத சமயத்துல மதுரைல எங்க போகணும்னாலும் பெரியார் வந்து தான் போகணும். எனக்கு விவரம் தெரியாத வயசுல அப்பா கூட வந்து பாட்டி ஊருக்கு போறப்ப, அப்பா பெரியார் அசோக் பவன்ல வாங்கி குடுக்கிற இடியாப்பம் குருமாவுக்காக பெரியார் பிடிக்கும். ஸ்கூல் படிக்கிறப்போ பாட்டி ஊருக்கு நானே தனியாக பெரியார் இறங்கி பஸ் மாறி போனப்போ, இப்போ துபாய் வந்து லாஸ் ஏஞ்சல்ஸ் தனியா வந்ததை விட பெருமிதம்.
விதம் விதமான எண்ணங்கள்
டூ வீலர் ஓட்ட ஆரம்பிச்சதுக்குப் பிறகு அப்பா, மாமாவை பெரியார்ல ட்ராப் பண்ற சந்தோஷத்துக்கு இணையே இல்ல. காலேஜ் படிக்கிறப்போ ஸ்டார் ஜெராக்ஸ்ல வேலை முடிச்சிட்டு பிரண்டு கூட டீயை குடுச்சிட்டு, "இன்டெர்னல்க்கு படிக்கணும்"னு சொல்றப்ப படிச்சி முடிச்ச மாதிரி ஒரு பீலிங். எல்லா விதமான ஜனங்களும் வித விதமான எண்ணங்கள் சிந்தனைகளோடு கடந்து போவாங்க.
மறக்க முடியாத பெரியார்
மதுரைல இருக்கும் எல்லோருக்கும் தந்தை பெரியாரோட இலட்சியங்கள் தெரியுமான்னு தெரியாது, ஆனா இந்த பெரியார் பஸ் ஸ்டாண்ட் தினமும் ஆயிரக்கணக்கான மக்களோட கனவு, துக்கம், சந்தோசம், காதல் எல்லாத்தையும் பார்த்திருக்கிறது. உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட் சம்பந்தப்பட்ட நினைவுகளை மறக்க முடியாது.