இதுவெறும் ஆரம்பம் தான்.. இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்.. பின்னணி என்ன?
மதுரை: மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீரென பேரணி சென்றுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையிலான தலைமை விவகாரம் உச்சத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் இரு தரப்பில் இருந்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் அதிமுக பொதுக்குழு, அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம் என எடப்பாடி பழனிசாமி கைகளே ஓங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழக அரசுக்கு எதிரான மின்சார கட்டண உயர்வு போராட்டம் என தொண்டர்கள் மத்தியிலும் இபிஎஸ் தனது தலைமையை நிரூபித்தார்.
ஆனால் மறுபக்கம் ஓபிஎஸ் தரப்பில் நிர்வாகிகளை நியமிப்பதை தவிர்த்து, சொல்லிக் கொள்ளும்படியாக பெரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படவில்லை. இதனிடையே ஓபிஎஸ் தரப்பில் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வந்தது. அதேபோல் கோவையில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.
அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக பழனிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஒபிஎஸ் அணியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் பேரணியாக சென்று முன்னாள் முதல்வர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டது மதுரை மாவட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவராக “ஸ்கோர்” செய்யும் இபிஎஸ் -திமுக அரசுக்கு எதிராக அடுத்த சாட்டை! ஒதுங்கும் ஓபிஎஸ்
அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் பேரணியில் ஈடுபட்டு எதிர்தரப்புக்கு பலத்தை காட்டுமாறு ஓபிஎஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் புதிய அலுவலகத்தை திறக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுக்குழுவுக்கு பின் சில வாரங்களாக அமைதியாக இருந்த ஓபிஎஸ், திடீரென வேகம் எடுத்துள்ளது அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஓபிஎஸ்-க்கான ஆதரவை நிரூபிக்க நிர்வாகிகள் அடுத்தக் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதனால் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேரணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஓபிஎஸ் - இபிஎஸ் இரு தரப்பிலும் சுற்றுப்பயணம், பேரணி என முடிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.