அப்போ ஈரோடு.. இப்போ மதுரை.. இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. சீரழியும் சிறுமிகள் வாழ்க்கை.. பெற்றோரே உஷார்
மதுரை: இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமடைந்த மாணவி, வீட்டின் கழிவறையிலேயே குழந்தை பெற்றுள்ளார். அண்மைக் காலமாக சமூக வலைதள பழக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் மாணவர்களின் வாழ்க்கையை புரட்டிபோடுவது பெற்றொரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஆன்லைன் வகுப்பிற்காக அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர்.
அந்த செல்போனில் இன்ஸ்டாகிராம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த வெற்றிமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் காய்கறி கடையில் வேலைபார்த்து வந்தார்.

இன்ஸ்டாகிராமில் பழக்கம்
இவர்களின் பழக்கம் இன்ஸ்டாகிராம் கடந்து நேரடியாக சந்திக்கும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இருவரும் தனியாக அடிக்கடி சந்தித்து பழகி வந்தனர். அப்போது அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வெற்றிமணி நெருங்கி பழகி உள்ளார்.

கழிவறையில் பிரசவம்
இதன் காரணமாக அந்த மாணவி கா்ப்பம் அடைந்தார். இதனை பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வீட்டின் கழிவறைக்கு சென்ற மாணவி, பிரசவ வலியையும் பொறுத்துக்கொண்டு, பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பெற்றோர் அதிர்ச்சி
பின்னர் சிறுமி மயங்கிய நிலையில் அங்கு கிடந்துள்ளார். இதற்கிடையே அந்த குடும்பத்தினர் மாணவியை தேடி பார்த்தபோது, அங்கு அவர் பிரசவித்து தாயும், சேயுமாக கிடந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னர் மாணவியிடம் குழந்தை குறித்து பெற்றோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நத்தம் பகுதியைச் சேர்ந்த வெற்றிமணி என்பவர் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

இளைஞர் கைது
இதனைத்தொடர்ந்து மாணவி மற்றும் குழந்தை இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெற்றிமணியை கைது செய்தனர். தான் கர்ப்பமானதை பெற்றோரிடம் மறைத்து, மாணவி ஒருவர் வீட்டின் கழிவறையிலேயே குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமால் அதிகரிக்கும் பிரச்சினை
இதேபோல் ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், சேலத்தைச் சேர்ந்த இளைஞர் ரங்கநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகாரளிக்க, பின்னர் அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதேபோல் மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவருடன் பழகி வந்த மாணவியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை பறித்த திருப்பி தர மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூகவலைதள பழக்கம்
வளர்ந்துவரும் தொழிற்நுட்பங்களால் குழந்தைகளின் கைகளுக்கு எளிதாக செல்போன் சென்றடைகிறது. ஆனால் செல்போன் தொழிற்நுட்பத்தையும், சமூக வலைதளங்களையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் இல்லாததால், சமூகத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு பெற்றோர் குழந்தைகளை கண்காணிக்க தவறுவதும் முக்கிய காரணமாக அமைகிறது.

விழிப்புணர்வு தேவை
இதனால் குழந்தைகளின் அன்றாட செயல்பாடுகளை கண்காணிப்பதும், குழந்தைகளுடன் அமர்ந்து பெற்றோர் அதிக நேரம் செலவிடுவதும் அவர்கள் பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க உதவும் என்று பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாட்டையும், சமூக வலைதள நடவடிக்கைகளையும் முறைப்படுத்த வேண்டும். டிஜிட்டல் சாதனங்கள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகளைப் பற்றித் தொடர்ச்சியாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications