இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க சாத்தியக்கூறு உள்ளது.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி
மதுரை: இலங்கையில் இருந்து இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சியை சேர்ந்த அபிராமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
அதில், ''இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக பெற்றோர்கள் இந்தியாவுக்கு அகதியாக வந்தனர். 1993- ஆம் ஆண்டு நான் இந்தியாவில் தான் பிறந்தேன்.

இந்திய குடியுரிமை வழங்க
தற்போது 29-வயது ஆகிறது. ஆதார் கார்டு பெற்று இருப்பதாகவும் தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும்.. இந்த விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இன்று விசாரணை
இந்த மனு மீதான விசானையின் போது நீதிபதி சுவாமிநாதன் கூறுகையில், ''மனுதாரரின் பெற்றோர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்துள்ளனர். பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மை இனமாக உள்ள மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்தால் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு செய்ய வேண்டும்
ஆனால், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு எந்த வித வழிகாட்டுதலும் இல்லை. எனவே இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்'' என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சாத்தியக்கூறுகள் உள்ளது
மேலும், மனுதாரர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் இந்தியாவில் பிறந்துள்ளார். எனவே மனுதாரர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த மனுவிற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த மனுவை தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய உள்துறை செயலாளர் 16 வாரங்களுக்குள் பரீசிலனை செய்ய வேண்டும் என வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications