மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது, ஆன்லைனிலும் வகுப்புகள் உண்டு: தமிழக அரசு தகவல்
மதுரை: மாணவர்கள் பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும், இணையவழியில் பாடங்கள், பகிரப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் 9ம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகள் நாளை அதாவது செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு நேற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அளித்த பேட்டியில் கேட்டுக் கொண்டார்.

ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு
இந்த நிலையில், நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் ஹைகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ''கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்றிருக்கும் சூழலில், நாளை முதல் ( செப்டம்பர் 1) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருப்பதும், அதனை முறையாகப் பின்பற்றுவதும் சாத்தியமில்லாதது. கொரோனா தடுப்பூசியை 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்குச் செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது தொற்றுப் பரவலை அதிகரிக்கச் செய்யும்.

கற்றலில் வேறுபாடு
மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இடையேயான கற்றலில் வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. இது ஆசிரியர்களுக்குக் கூடுதல் சுமையாக அமையும். அனைத்து மாணவர்களும் நேரடியாகப் பள்ளிக்கு வர வேண்டும் என வற்புறுத்தாமல் ஆன்லைன் வழியாக வகுப்புகளைக் கவனிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். கொரோனா தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்க வழிகாட்டல்களை வழங்க உத்தரவிட வேண்டும்''. இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இரு நீதிபதிகள் பெஞ்ச்
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு வழக்கறிஞர் வதிடுகையில், 'பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை சார்பில், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டல்கள் முறையாகப் பின்பற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 50% குறைவாகவே மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். கல்லூரிகளில் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் மட்டுமில்லாமல் ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்படும். இணைய வழியில் பாடங்கள், வகுப்புகள் பகிர நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படும். பல்துறை நிபுணர்களோடு ஆலோசித்த பின்னரே மாணவர்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.

மாணவர்கள் வர தேவையில்லை
மனுதாரர் தரப்பில், நேரடியாக வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததால், அரசுத் தரப்பில், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றுத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தெலுங்கானாவில் தடை
இதனிடையே, தெலுங்கானாவில் நாளை முதல், 8ம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளுக்காக பள்ளிகளை திறக்கும் அம்மாநில அரசு முடிவுக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications