எங்கள் குரலை கேட்காமல் மசோதா தாக்கல் செய்தது ஜனநாயக படுகொலை அல்லவா - சு.வெங்கடேசன் எம்.பி குமுறல்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்க படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்ற பட்டிருக்கின்றன இது ஜனநாயகப் படுகொலை அல்லவா என்று சு. வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: 150க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப்படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. லோக்சபாவில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்பதை வெங்கையா நாயுடு அறிந்திருப்பார் என சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமளி துமளியுடன் நடந்து முடிந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பெகாசஸ் உளவு சர்ச்சை, வேளாண் சட்டங்கள் பற்றி விவாதம் நடத்தக்கோரி எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
கூச்சல் குழப்பத்திற்கு இடையேயும் நாடாளுமன்றத்தில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. எதிர்கட்சிகளின் அமளி பற்றி ராஜ்யசபாவில் பேசிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, உருக்கமாக பேசி கண்ணீர் விட்டார், வழிபாட்டு தலம் போன்ற புனிதமான மாநிலங்களவை மாண்பை எம்பிக்கள் காக்க தவறிவிட்டதாக கூறிய வெங்கையா நாயுடுவின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மதுரை தொகுதி எம்.பி சு. வெங்கடேசன்,மக்களின் அடிப்படை சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைத்துள்ள பெகாசஸ் பற்றி ஒரு நிமிடம் கூட விவாதிக்க மறுத்து, 19 மசோதாக்களை விவாதமே இன்றி நிறைவேற்றி, அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே கூட்டத்தொடரை முடித்துவிட்டது ஒன்றிய அரசு. 6 ஆவது கூட்டத்தொடர் ஜனநாய படுகொலையின் சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாநிலங்களவையில் ஜனநாயகத்தின் விழுமியங்கள் பற்றி மாண்புமிகு வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசியிருக்கிறார். மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்பதை அவரும் அறிந்திருப்பார் என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
150க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்க படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்ற பட்டிருக்கின்றன. குடிமகன்களின் அடிப்படை சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைத்துள்ள பெகாசஸ் வேவு பார்த்தல் பற்றி ஒரு நிமிடம் கூட விவாதிக்க மறுத்தனர், எதிர்கட்சிகளை கேட்காமலே, அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே கூட்டத்தொடர் முடிந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்றம் என்கிற மதிப்புமிகு அவையை கேலிப் பொருளாக ஆக்கி இருக்கிறது ஆளும்கட்சி. எங்கள் குரல்கள் ஏன் கேட்கப்படவில்லை? இது என்ன ஜனநாயகம் என்று நாங்கள் கேட்கிறோம். கட்சி சாராத நடுநிலை பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு வெங்கையா நாயுடு எங்கள் உரிமைகளுக்காகவும் எங்கள் ஜனநாயகத்திற்காகவும் கொஞ்சம் பேச வேண்டும் என்றும் கேட்கிறோம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications