டாக்டர் கிளம்பிட்டார்..திண்ணையும் காலி! காவி துண்டு போட்டு வைக்கும் ‘தலைகள்’! கண் திறப்பாரா ‘அண்ணா’!
மதுரை : மதுரை பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் விலகியுள்ள நிலையில் அவர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சரவணன் வகித்து வந்த பதவியை பிடிப்பதற்காக மதுரையில் பல்வேறு நிர்வாகிகள் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்துக்கு எதிராக திடீரென தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது மதுரையில் நடந்த சம்பவம்.
ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த சென்ற நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது அங்கிருந்த பாஜகவினர் திடீர் தாக்குதல் நடத்தியதோடு அமைச்சரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர் சரவணன்
அப்போது சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்தது. ஆனால் அப்போது மிகவும் ஆவேசமாக பேசிய பாஜக மாவட்ட தலைவரான டாக்டர் சரவணன் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னுடன் தேர்தலில் போட்டியிட முடியுமா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

அண்ணாமலை
இந்நிலையில் எதிர்பாராத திருப்பமாக அன்று நள்ளிரவே அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்த டாக்டர் சரவணன் மன்னிப்பு கேட்டதோடு பாஜகவில் இருந்து விலகுவதாக கூறினார். அமைச்சரின் இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது மனதில் இருந்த பாரம் இறங்கிவிட்டது அமைச்சரிடம் வருத்தம் தெரிவித்தேன். மேலும் சாதி மத அரசியல் செய்யும் பாஜகவில் இனியும் தொடரப்போவதில்லை கட்சியிலிருந்து விலகுகிறேன் என அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பான சூழல் மதுரையில் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக அண்ணாமலை அறிக்கையை வெளியிட்டார்.

மாவட்ட தலைவர்
ஆனால் அதற்கு முன்னதாகவே தான் ராஜினாமா செய்து விட்டதாக சரவணன் கூறியிருந்தார். அடுத்ததாக அவர் திமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தன்னுடன் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் அழைத்துச் செல்வார் எனக் கூறப்படுகிறது. எது எப்படியோ எனினும் அண்ணன் எப்போது கிளம்புவார் திண்ணை எப்போது காலி ஆகும் என்ற கதையாக சரவணன் விட்டுச் சென்ற மாவட்ட தலைவர் பதவியை கைப்பற்ற பாஜக நிர்வாகிகளுக்குள் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

கடும் போட்டி
தற்போது நிர்வாக காரணங்களுக்காக தற்காலிக தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மாவட்ட தலைவர் பதவியை கைப்பற்ற முன்னாள் நிர்வாகிகளான சீனிவாசன், சசி ராமன், துணைத் தலைவர் ஜெயவேல், உள்ளிட்ட பலர் பதவியை குறிவைத்து கோதாவில் இறங்கி உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவருக்கு பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலை வருகைக்குப் பிறகு பல்வேறு கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள் இளைஞர்கள் பாஜகவுக்கு வருகின்றனர்.

நிர்வாகிகள் கோரிக்கை
ஆனால் இங்கு முக்கிய பதவிகளை பெற்று விட்டு தமிழக அளவில் பேமஸானதும் மீண்டும் வேறு கட்சிகளுக்கு தாவுவது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஏற்கனவே கட்சியில் இருக்கும் நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் வேறு கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு வருபவர்களை முதலில் களப்பணியாற்ற சொல்லி பிறகே மாவட்ட தலைவர், மாநில அளவிலான பொறுப்புகளை வழங்க வேண்டும் என்கின்றனர். உள்ளூர் பாஜக நிர்வாகிகள் எதை எப்படி எனும் தற்போதைய நிலையில் மதுரை மாவட்டத்தை பொருத்தவரை பாஜக அடுத்த மாவட்ட தலைவர் யார் என்பது தான் பேசு பொருளாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications