மதுரை அரசு மருத்துவமனை அவலம்.. கரண்ட் கட்.. ஆக்சிஜன் இல்லை.. இறந்தோர் எண்ணிக்கை 5 ஆனது!
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 3 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வென்ட்டிலேட்டர் செயல்படாததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக தற்போது உயர்ந்துள்ளதால் பரபரப்பு கூடி வருகிறது. இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி நிறைந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
நேற்று சாயங்காலம் மதுரையில் இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டியது. இந்த சூறைக்காற்றால் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. கரண்ட் கம்பிகள் அறுந்து விழுந்ததில், பல இடங்களில் கரண்ட் போனது.
அதுபோல, மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரியிலும் கரண்ட் போய்விட்டது. இதனால் உடனடியாக ஆஸ்பத்திரியில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது.
தலைகாய சிகிச்சை பிரிவு
ஆனால் அந்த ஜெனரேட்டரும் திடீரென ரிப்பேர் ஆகிவிட்டது. இதனால் ஆஸ்பத்திரி முழுக்க கரண்ட் இல்லாமல் போய்விட்டது. தலை காய சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவிகளும் கரண்ட் இல்லாததால் செயல்படவில்லை.
3 பேர் உயிரிழப்பு
இந்த பிரிவில் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த சிகிச்சை பிரிவில் இருந்தவர்கள் திணறினார்கள். இதில் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் மதுரை அருகே பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா 55, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் 55, ஒட்டன்சத்திரம் பழனியம்மாள் 60 ஆகியோர் ஆவர்.
பெரும் பரபரப்பு
இப்படி ஆக்சிஜன் இல்லாமல் ஐந்தே நிமிடங்களில் 3 உயிர்கள் பறிபோனதை பார்த்ததும், அங்கிருந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் சண்டைக்கு போய்விட்டனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
முற்றுகை
இந்நிலையில், மூச்சு திணறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொதித்து போய் இருந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியிலேயே போராட்டத்தை கையில் எடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, மருத்துவமனைக்கு துணை கமிஷனர் உள்ளிட்டவர்கள் விரைந்து வந்தனர். உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
உயிர் பிழைத்தனர்
இதனிடையே, உயிருக்கு போராடிய மற்ற நோயாளிகளை காப்பாற்ற பேட்டரிகள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் அவசர அவசரமாக வென்டிலேட்டர் இயக்கப்பட்டது. இதன்காரணமாக மற்ற நோயாளிகள் உயிர் பிழைக்க நேர்ந்தது.
மருத்துவமனை
உயிரிழப்பு, பரபரப்பு, பதட்டம், முற்றுகை என இத்தனை சம்பவங்கள் நடந்தபோதிலும், "மருத்துவமனையில் வென்டிலேட்டர் வேலை செய்யவில்லை என கூறப்படுவது உண்மையில்லை" என்று ஆஸ்பத்திரி டீன் கூறி உள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் அனைவருமே ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். எனினும், இப்படி அநியாயமாக 5 உயிர்கள் பலியானதை அறிந்து தமிழக மக்கள் உறைந்துபோய் உள்ளனர்!