வைரலான போக்குவரத்து எஸ்.ஐயின் வீடியோ: டிஜிபி போனில் பாராட்டு.. மதுரை கமிஷனர் நேரில் பாராட்டு
மதுரை: மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகளிடம் கனிவாக பேசும் எஸ்.ஐ.யை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார். மதுரை மாநகரக் காவல் ஆணையர் அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.
போக்குவரத்து காவல் பணியோடு, பொதுமக்களிடம் மிகுந்த கரிசனையோடு ஒலிபெருக்கியில் பேசி, சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருபவர் மதுரையை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டி.

எல்லாரும் நல்லாருக்கணும்
''எல்லாரும் நல்லாருக்கணும்... குடும்பம் குட்டிகளோட நல்ல வாழணும்... அதனால ரோட்டுல போகும்போது கவனமா போகணும்... தலைக்கவசம் கண்டிப்பா அணிஞ்சுக்கங்க... இதெல்லாம் ஒங்க நல்லதுக்குதான் நாங்க சொல்றோம்'' இந்த உத்வேகமான, கனிவான குரலுக்கு சொந்தக்காரர்தான் ழனியாண்டி. மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வருகிறார் இவர்.

29 ஆண்டுகள் அனுபவம்
காவல்துறையில் பணிக்குச் சேர்ந்து 29 ஆண்டுகளாகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை நகர் போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றி வருகிறார் பழனியாண்டி.. 'குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும்... ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சி போனாத்தான் வாழ்க்கை இன்பமா இருக்கும்... எல்லாரும் சந்தோஷமா ஆனந்தமா இருக்கணும்... எதுக்காகவும் கவலைப்படக்கூடாது..' என்று போக்குவரத்து விழிப்புணர்வுடன் வாழ்வியல் அனுபவங்களையும் ஒலிபெருக்கியில் உரத்துப் பேசுகிறார்.

இவரின் குரல்தான் ஆறுதல்
பல்வேறு கவலைகளுடன் சாலைகளில் செல்பவர்கள் பழனியாண்டியின் குரலை கேட்டு தங்களை ஆறுதல் படுத்தி கொள்கின்றனர். இதில் பெரும்பாலானோர் பழனியாண்டிக்கு ரசிகர்களாவே மாறி விட்டனர். 'என்னோட வீட்டுல ஒரு லட்சம் ரூபாய் மதிப்புல புத்தகங்கள் வச்சிருக்கேன்... வேல முடிஞ்சு வீட்டுக்குப் போனா வாசிப்பு... வாசிப்பு.. வாசிப்புதான்... அதுல நான் கத்துக்கற நல்ல விசயங்கள பொதுமக்கள்கிட்ட பகிர்ந்துக்கிறேன்... இந்தப் பணிய ரொம்ப ரசிச்சு நான் செய்யுறேன்... மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன் சார் நான் வேலை செய்யுற இடத்துக்கே வந்து எனக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செஞ்சாரு... அத பெருமையா கருதுறேன்'' என்று மகிழ்வுடன் பேசுகிறார் பழனியாண்டி.

சைலேந்திரபாபு பாராட்டு
கனிவுடன் பேசி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் இந்த காவலர் பழனியாண்டியின் புகழ் பட்டிதொட்டிஎங்கும் பரவியது. இதனை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போனில் தொடர்பு கொண்டு காவலர் பழனியாண்டியை வாழ்த்தினார். மேலும் மதுரை வரும்போது உங்களை அழைத்து பேசுவதாகவும் சைலேந்திரபாபு கூறினார். இதனை தொடர்ந்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சால்வை அணிவித்துப் பாராட்டி, புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.












Click it and Unblock the Notifications