மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு கண் பிரச்சினை...தாய்லாந்து மருத்துவர்களிடம் ஆலோசனை
மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு கண் சிகிச்சை குறித்து தாய்லாந்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பார்வதி என்ற யானைக்கு கண்ணில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி கண் சிறப்பு பிரிவு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் உள்ள யானைகளின் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மேல்சிகிச்சை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்ற யானை கடந்த 2000ஆம் ஆண்டு வாங்கப்பட்டது.
அதற்கு தற்போது 25 வயது ஆகிறது. கடந்த ஆண்டு மே மாதம் யானையின் இடது கண்ணில் வெள்ளையாக பூ படுதல் போன்று பார்வை கோளாறு ஏற்பட்டது.
இன்னும் 6 முதல் 8 வாரம்தான்.. இந்தியாவில் கொரோனா 3வது அலை தாக்கும்- எய்ம்ஸ் தலைவர் சொல்லும் காரணம்
இதுகுறித்து தகவல் அறிந்து மதுரை கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் சரவணன் தலைமையில் டாக்டர்கள் நேரில் வந்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அரவிந்த் கண்மருத்துவமனை டாக்டர்கள் யானை கண்ணை பரிசோதனை செய்து மருந்து கொடுத்து வந்தனர்.
மீனாட்சி அம்மன் கோவில் யானை
இந்தநிலையில் இடது கண்ணில் வந்தது போன்று வலது கண்ணில் லேசாக பார்வை கோளாறு ஏற்பட்டதாக யானை பாகன் கோவில் இணை கமிஷனரிடம் தெரிவித்தர். அதை தொடர்ந்து கோவில் இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், யானையின் கண்ணை பரிசோதனை செய்து பார்க்குமாறு சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி சிறப்பு மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.
கண்ணில் புண்
அதன் பேரில் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி கண் சிறப்பு பிரிவு டாக்டர் ரமணி தலைமையில் டாக்டர்கள் அடங்கிய குழு நவீன கருவிகள் மூலம் யானை பார்வதியின் கண்களில் பரிசோதனை செய்து பார்த்தனர். மேலும் ரத்த மாதிரி உள்ளிட்ட பல்வேறு மாதிரிகளை யானையிடமிருந்து சேகரித்து உள்ளனர். யானையின் இடது கண்ணில் புண் மற்றும் புரை நோய் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கண்ணில் பார்வை சற்று மங்கி உள்ளதால் யானை சோர்வாக இருப்பதாக தெரியவந்தது.
மருத்துவர்கள் கண்காணிப்பு
யானைக்கு கண் விழித்திரையில் பாதிக்கப்பட்டு இரவில் கண்கள் வெள்ளை நிறம் போன்று காணப்பட்டதால் கடந்த சில நாட்களாக வீடியோ கான்பிரன்சிங் முறையில் சென்னையிலுள்ள அரசு கால்நடை மருத்துவர் மூலமாக கண்சிகிச்சை வழங்கப்பட்டு அதற்கான மருந்துகளும் அளிக்கப்பட்டுவந்தன.
கண் பரிசோதனை
இந்நிலையில் கண் மருத்துவர்கள் ஆலோசனையின் பெயரில் சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடைத்துறையில் உள்ள சிறப்பு மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலமாக வரவழைக்கப்பட்டு அதனை பயன்படுத்தி மருத்துவர் சிவசங்கர், மதுரை மண்டல உதவி இயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் யானை கண்ணை பரிசோதித்து, தற்போது அளிக்கும் சிகிச்சை முறையே தொடருமாறு அறிவுறுத்தினர்.
யானைகள் மருத்துவமனை
இதனிடையே யானையின் மருத்துவபரிசோதனையின் முடிவை பொறுத்து தாய்லாந்து நாட்டில் உள்ள யானைகளுக்கென பிரேத்யேகமாக செயல்படும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மேற்சிகிச்சை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
யானைக்கு சிகிச்சை பற்றி கேட்ட அமைச்சர்
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவில் யானை பார்வதிக்கு தாய்லாந்து கண் மருத்துவர்கள் மூலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்தாண்டு நடைபெற உள்ள குடமுழுக்கு குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின் போது அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் பங்கேற்றனர்.