மின் கட்டணத்தை உயர்த்த கூறவில்லை.. மாற்றியமைக்கவே அறிவுறுத்தியது.. பாஜக நிர்வாகி விளக்கம்!
மதுரை: தமிழகத்தில் மின் கட்டணத்தை மாற்றியமைக்க மட்டுமே மத்திய அரசு கடிதம் எழுதியதாக பாஜக பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷா தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் அறிவித்தார். இதற்கு தமிழக மின்சார வாரியத்தின் கடனும், மத்திய அரசின் அறிவுறுத்தலுமே காரணம் என்றும் விளக்கமளித்தார். அதேபோல் மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி 28 முறை மத்திய அரசு கடிதம் அனுப்பியதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பொருளாதாரப் பிரிவு
குறிப்பாக மின்சார கட்டண உயர்வை கண்டித்து பாஜக நாளை போராட்டம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே மின்சார கட்டணம் உயர்விற்கு காரணம் என்று பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா, நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைத்தார்.

திமுக மீது விமர்சனம்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து எம்.எஸ்.ஷா கூறுகையில், 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடைபெறும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில், ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாததால், மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் குறைந்துள்ளது. இதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.

பாஜக அறிவுறுத்தியது என்ன?
மத்திய அரசு பிற மாநிலங்களை விட தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை. மின் கட்டணத்தை மாற்றியமைக்க மட்டுமே கூறியது. எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்தாலும், மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஏற்கனவே குறைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக அரசு குறைக்க மறுக்கிறது.

ஜிஎஸ்டி வரி
அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை கொண்டே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு வரியை குறைத்துள்ளது. அரிசி, தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது விரைவில் குறைக்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications