வலுவிழந்த காற்றழுத்தம்..பல ஊர்களில் திடீர் மழை..சிவகாசியில் சாரல்..இன்று யாருக்கு குடை அவசியம்
மதுரை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகாலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சிவகாசியில் நள்ளிரவு முதலே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மேலும் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்கக் கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இலங்கையின் திரிகோணமலை அருகே கடலோரப் பகுதியை நெருங்கியதும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அது நேற்று முன்தினம் இரவு இலங்கையின் திரிகோணமலைக்கு தெற்கே நகர்ந்து, மேற்கு நோக்கி இலங்கையின் ஊடாக கடந்து சென்று நேற்று காலை குமரிக் கடல் பகுதிக்கு சென்றது.

இந்த நகர்வின் காரணமாக இலங்கை மற்றும் வட இலங்கை, மன்னார் வளைகுடா பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மேலும், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்தது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
இதனிடையே நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை தென் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் டி.குண்ணத்தூர், கல்லுப்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று நள்ளிரவிலும் இன்று அதிகாலையிலும் பலத்த மழை பெய்தது. இதனால் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மேலும் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரைக்கும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications