தமிழ்நாடு கோவில்களுக்குள் பக்தர்களுக்கு எப்போது அனுமதி? அமைச்சர் சேகர் பாபு சொன்ன அதிரடி பதில்
மதுரை: தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற நிலை வரும்போது பக்தர்கள் வழிபாடு செய்ய கோவில்கள் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த வாரம் நகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் பரவல் வேகமாக குறைந்து வரும் நிலையில் கோவில்கள் என்பது எப்போது என்ற கேள்வி எழுந்தது.
ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
இதனிடையே இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். தீ விபத்து நடைபெற்ற வீர வசந்த மண்டபத்தில் புனரமைப்பு பணிகள் எப்படி நடக்கின்றன என்பதையும் அவர் கேட்டறிந்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆய்வு
சேகர்பாபுவிடம், கோவில்கள் திறப்பு குறித்து நிருபர்கள் அப்போது, கேள்வி எழுப்பினர். பதிலளித்து பேசிய அமைச்சர், கொரோனாவால் ஒரு உயிர் கூட போகவில்லை என்ற நிலை வரும்போது தமிழ்நாட்டில் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். முன்னதாக நேற்று அவர் அளித்த பேட்டியில் நோய் பாதிப்பு குறைந்து வருவதால் விரைவில் கோவில்கள் பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஆபரணங்கள் விவரம்
அதேநேரம் கோவில்களில் உள்ள ஆபரணங்கள் குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாது சொத்துக்களை பதிவேற்றம் செய்வது போல இதை செய்வதில் பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன. நகைகள் எவ்வளவு இருக்கின்றன என்று தெரிந்து கொள்வது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் அது போல பதிவேற்றம் செய்ய முடியாது என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சொத்து ஆவணங்கள்
கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் ஏற்கனவே பதிவேற்ற உத்தரவிட்ட அமைச்சர் சேகர் பாபு கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் , வாடகை வசூல் அளித்தல் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தினார். அதன்படி முதற்கட்டமாக 3,44,647 ஏக்கர் நிலம் குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கோயில்களின் 72% நில விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வேகமாக பராமரிப்பு பணிகள்
மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற தீ விபத்துக்குப் பிறகு மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் கடந்த ஆட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. தற்போது நடைபெறும் ஆட்சியில் முயல் வேகத்தில் நடக்கும். எனவே விரைவாக அது சரி செய்யப்படும். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கு விரைவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.