கட்சியில் சேர்ந்த 4 மணி நேரத்தில் சீட் கொடுப்பதா? டாக்டர் சரவணனுக்கு எதிராக பொங்கியெழுந்த பாஜகவினர்!
மதுரை: மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் மதுரை புதூரில் உள்ள பாஜக அலுவலகத்தை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கட்சியில் சேர்ந்த 4 மணி நேரத்தில் டாக்டர் சரவணனுக்கு சீட் கொடுக்கப்பட்டது திமுகவில் மட்டுமல்ல, பாஜகவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கட்சியில் நீண்டநாள் உழைத்த சீனிவாசனுக்கு வாய்ப்பு கொடுக்காமல், கட்சியில் சேர்ந்த உடனேயே சரவணனுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளனர் என்று பாஜகவினர் குற்றம்சாட்டினார்கள்.
டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டாக்டர் சரவணன். இவர் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. டாக்டர் சரவணனுக்கு வேறு ஒரு தொகுதி கொடுக்கப்டலாம் என்று கூறப்பட்டது.
பாஜகவில் இணைந்தார்.
ஆனால் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது டாக்டர் சரவணனுக்கு வேறு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் இன்று காலை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். திமுகவில் மாவட்ட கவுன்சிலர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், பாஜக கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும், நல்ல திட்டங்கள் கொண்டு வந்ததாகவும் சரவணன் தெரிவித்தார்.
மதுரை வடக்கு தொகுதியில் சீட்
சரவணன் காலையில் பாஜகவில் சேர்ந்தபோது, பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாத நிலையில் பாஜகவில் அவருக்கு சீட் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி மாலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோது, டாக்டர் சரவணன் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. கட்சியில் சேர்ந்த 4 மணி நேரத்தில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டது திமுகவில் மட்டுமல்ல, பாஜகவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவினர் கடும் எதிர்ப்பு
கட்சியில் நீண்டநாள் உழைத்த சீனிவாசனுக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும்; கட்சியில் சேர்ந்த உடனேயே சரவணனுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று பாஜகவினர் காலையிலே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த எதிர்ப்பையும் மீறி டாக்டர் சரவணனுக்கு சீட் கொடுக்கப்பட்டதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மதுரை புதூரில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள் கட்சி தலைமைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், அவர்கள் புதூரில் உள்ள பாஜக அலுவலகத்தை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினரின் இந்த போராட்டம் கட்சி தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.