தமிழகத்தில் கொரோனா நிவாரணத்திற்கு.. 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை.. வழங்கிய தி மார்டின் குழுமம்
சென்னை: தி மார்ட்டின் குழுமத்தின் சார்பாக சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம். இந்தாண்டு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் தீவிர தன்மை மிக மோசமாக உள்ளது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மாநில அரசின் வருவாய் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள அனைவரும் தங்களால் முடிந்த நிதியை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து பெரு நிறுவனங்கள், தனிநபர்கள், மாணவர்கள் எனப் பலரும் தங்களால் முடிந்த நிதியை நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், தி மார்ட்டின் குழுமத்தின் சார்பாக, மார்ட்டின் டிரஸ்ட் சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்களை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது.
100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள், 400க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள், 1000க்கும் மேற்பட்ட ஆக்சிமீட்டர்களை மார்டின் குழுமம் வழங்கியுள்ளது. மேலும், 12.5 N95 மாஸ்க்குகள், 10 ஆயிரம் சானிடைசர்கள், 5000 டூத் ப்ரஷ்களையும் தமிழக அரசுக்கு மார்டின் குழுமம் அளித்துள்ளது.
இதனை மார்டின் குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது அவருடன் மார்டின் குழுமத்தின் இயக்குநர் டெய்சி மார்டின், செயல் அலுவலர் ஜார்ஜ் மார்ஷல் ஆகியோர் உடனிருந்தனர்.
இது குறித்து மார்ட்டின் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க முடிந்த உதவிகளைச் செய்வதாகவும் மக்கள் விரைவில் இந்த பெருந்தொற்றில் இருந்து மீண்டு வரப் பிரார்த்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECOMMENDED STORIES