பயிர்க்காப்பீட்டில் பல லட்சம் மோசடி.. விவசாயிகள் அடிமடியில் கைவைத்த மயிலாடுதுறை விஏஓ.. ஷாக் சம்பவம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து விவசாய காப்பீட்டில் பல லட்ச ரூபாய் மோசடி செய்த வி.ஏ.ஓ திருமலைசங்கு என்பவரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அகரகீரங்குடி ஊராட்சியில் அமைந்துள்ளது முட்டம் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர்.
அந்த பயிர்களுக்கு, சிட்டா, அடங்கலுடன் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு என்பவரிடம் சமர்ப்பித்துப் பயிர்க் காப்பீட்டினையும் செய்திருந்தனர்.
விவசாயிகளுக்கு வராத பயிர்க்காப்பீடு
அந்த பருவத்தில் பெய்த கனமழையின் காரணமாகச் சம்பா பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 68 சதவீதத் தொகையாக ரூ.22,000-த்தை காப்பீட்டு நிறுவனம் அறிவித்தது. இந்த காப்பீட்டுத் தொகையானது 4-இல் ஒருபங்கு விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. இதையடுத்து, இழப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். அவர்களிடம் உழவன் செயலியைப் பயன்படுத்தி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
வேறு கணக்குகள்
அதில், விவசாயிகளின் காப்பீட்டுத் தொகையானது வேறு சில வங்கிக் கணக்குகளில் தொகை செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் குழம்பிய விவசாயிகள், தங்களுடைய காப்பீட்டுத் தொகை யாருடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்பதைப் பார்த்துள்ளனர். அதில் விவசாய காப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் மனைவி, மகள் மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகள் என்பது தெரியவந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அலட்சியமான பதில்
மேலும் சிலரது புல எண்ணுக்கான காப்பீட்டுத் தொகை கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் பெயருக்கே வரவு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரிடம் நேரில் சென்று விவசாயிகள் கேட்டபோது அவர் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
ரூ 22 லட்சம் முறைகேடு
அந்த புகாரில் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு போலியான சிட்டா, அடங்கல் வழங்கி மறையூர் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றும், அதன் பேரில் பயிர்க்காப்பீடு பெற்றும் ஊழல் செய்துள்ளதாகவும், அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். காப்பீடு மூலம் மட்டுமே சுமார் 100 ஏக்கர் பயிருக்கு ரூ.22 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் பெற்ற வகையில் பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விஏஓ சஸ்பெண்ட்
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி விசாரணை மேற்கொண்டு வருகிறார். சில ஆவணங்களைச் சரிபார்த்ததில் வி.ஏ.ஓ திருமலை சங்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து வி.ஏ.ஓ திருமலைசங்கு பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார்.