எங்களுக்கு இந்தி தெரியாது-மிசோ மொழி தெரிந்த தலைமை செயலாளர்தான் வேண்டும்-மிசோரம் முதல்வர் கலகக்குரல்
அய்ஸ்வால்: தமது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு இந்தி மொழி தெரியாது; ஆங்கிலமும் பிரச்சனையானதுதான்.. அதனால் மிசோ மொழி தெரிந்த அதிகாரியையே மிசோரம் மாநிலத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தி பிரிண்ட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி விவரம்: மத்திய அரசால் கடந்த அக்டோபர் 28-ந் தேதி ரேணு சர்மா, மிசோரம் மாநிலத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதே நாளில் Pu C. Lalramzauva-வை மாநிலத்தின் புதிய தலைமை செயலாளராக மிசோரம் முதல்வர் சோரம்தங்கா நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.
2 நாட்களுக்கு அதிகனமழை... சென்னை,டெல்டாவில் வெளுத்து வாங்கப்போகுது - மீனவர்களே கரை திரும்புங்கள்
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 29-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில தலைமை செயலாளராக குஜராத் கேடரை சேர்ந்த Lalnunmawia Chuaugo ஓய்வு பெற்ற நிலையில் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மணிப்பூர் கேடர் அதிகாரியான J.C Ramthangaவை புதிய தலைமை செயலாளராக நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம், ரேணு சர்மாவை புதிய தலைமை செயலாளராக நியமித்துள்ளது.
இந்தி தெரியாது..ஆங்கிலமும் அக்கப்போர்
மிசோரம் மாநில மக்களில் பெரும்பான்மையோருக்கு இந்தி மொழி தெரியாது. என்னுடைய அமைச்சரவை சகாக்களும் இந்தி மொழியை புரிந்து கொள்ள முடியாதவர்கள்தான். சில அமைச்சர்களுக்கு ஆங்கில மொழியில் பேசுவது கூட புரியாத நிலைதான் உள்ளது. இந்த பின்னணியில், மாநிலத்தின் மொழியான மிசோ மொழி தெரியாத ஒரு தலைமை செயலாளரால் ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியாது.
புதிய நடைமுறை
மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டது முதலே மிசோ மொழி தெரியாத அதிகாரியை மாநிலத்தின் தலைமை செயலாளராக இதுவரை மத்திய அரசு நியமித்தது இல்லை. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாக இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தாலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. உள்ளூர் மொழி தெரியாத ஒரு அதிகாரி, இந்தியாவின் பிற மாநிலங்களில் கூட தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டதும் இல்லை என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
பாஜக கூட்டணி மீது நம்பிக்கை
பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை மாற்றி இருக்கின்றன. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடக்கம் முதலே இடம்பெற்று வரும் ஒரே வடகிழக்கு மாநில பிரதிநிதி நான் மட்டும்தான். தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ள என்னுடைய இந்த சிறப்பு வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை நீங்கள் நிராகரித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்விக்குள்ளாக்கும். ஆகையால் புதிய தலைமை செயலாளர் நியமனம் தொடர்பான உத்தரவை மாற்றி என்னுடைய வேண்டுகோளை ஏற்க வேண்டும். இவ்வாறு சோரம்தங்கா அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
இம்மெச்சூர் முதல்வர்- பாஜக அட்டாக்
இப்படி ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை மிசோரம் முதல்வர் சோரம்தங்காவின் ஆலோசகர் Pu C. Lalramzauva உறுதி செய்திருக்கிறார். ஆனால் சோரம்தங்காவின் இந்த கடிதத்தை மிசோரம் மாநில பாஜக கடுமையாக விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக மிசோரம் மாநில பாஜக தலைவர் Vanlalhmuaka கூறுகையில், நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழி இந்தி, ஆங்கிலம். மாநில அரசுக்கும் தலைமை செயலாளருக்கும் இடையே மொழி ஒரு முட்டுக்கட்டையாக இருக்கும் என நான் கருதவில்லை. மிசோரம் மாநிலம் முழுவதும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. முதல்வர் சோரம்தங்காவின் கடிதமானது அவரது சுயநலன் சார்ந்ததுதான். சோரம்தங்காவின் கடிதம் முதிர்ச்சியற்ற, வெட்கக் கேடானது; வருத்தம் தரக்கூடியது என Vanlalhmuaka கூறியுள்ளார். இவ்வாறு தி பிரிண்ட் இணையதள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி மொழிக்கு எதிராக மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தூக்கியிருக்கும் போர்க்கொடி நாடு முழுவதும் பெரும் கவனத்தையும் பெற்றுள்ளது.