மகாராஷ்டிராவில் பஸ் -லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி -சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்ற போது பரிதாபம்
மும்பை: மகாராஷ்ட்ராவில் பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீரடி சாய்பாபா கோயிலுக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்ட்ரா மாநிலம் தானேவில் இருந்து சீரடியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று அதிகாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. தானேவை சேர்ந்த 50 பேர் அந்த பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். சீரடியில் உள்ள பிரசித்திபெற்ற சாய்பாபா கோயிலுக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், நாஷிக் - சீரடி நெடுஞ்சாலையில் பத்தாரே கிராமம் அருகே வந்த போது, எதிரே தறிகெட்டு வேகமாக வந்த லாரி ஒன்று இந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பஸ்ஸில் இருந்த 2 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்ட்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications