இதுதான் பர்த் டே கொண்டாட்டமா? 17 வயது சிறுவனின் செயலால் அலர்ட் ஆன போலீஸ்.. பரபர சம்பவம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு 21 கேக்குகளை 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தேடி கண்டுபிடித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். மும்பையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதைகளாகியுள்ளன.
முன்பு இளைஞர்கள் வாளை ஏந்தி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போது சிறுவர்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கும் விசயமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திரைப்படங்கள்
சினிமாக்களில் துப்பாக்கிகளும், கத்திகளும் மிகச் சாதாரணமாக காட்சிப்படுத்தப்படுவது இயல்பாகிவிட்டது. ஏறத்தாழ 80%க்கும் அதிகமான திரைப்படங்களில் ஆயுதங்கள் இயல்பானதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக யதார்த்த வாழ்க்கையிலும் இளைஞர்கள் இந்த ஆயுதங்களை கையில் எடுத்துள்ளனர். இதை பெருமையாகவும் கருதுகின்றனர். தற்போது இதையெல்லாம் கடந்து, சிறுவர்களும் ஆயுதங்களை கையில் எடுக்க தொடங்கியுள்ளனர்.

சிறுவர்கள்
அந்த வரிசையில் மும்பையில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாளை கொண்டாட 21 கேக்குகளை வாளால் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் போரிவாலி எம்எச்பி காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து சிறுவன் மீது ஆயுத் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என நினைத்து இந்த சிறுவன் இவ்வாறு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. காவல்துறையினர் சிறுவனை தேடி வந்தனர். பின்னர் அவனை கண்டுபிடித்து அவனுக்கு எதிராக நோட்டீஸ் வழங்கினர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் சிறுவன் ஆயுதம் ஏந்தி கேக் வெட்டியதை ஒப்புக்கொண்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உரையாடல்
இவ்வாறு பொதுவெளியில் ஆயுதம் ஏந்தி சுற்றுவது தன்னை மற்றவர்களை விட பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளும் மனநிலையின் வெளிப்பாடு என்றும், இவ்வாறு சுற்றுவது கெத்து என சொல்லப்பட்டுவருவதும் சிறுவர்கள் ஆயுதங்களை நோக்கி நகர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றளர். ஆயுதங்களை கைகளில் எடுப்பதை நியாயப்படுத்தும் திரைப்படங்கள், அதை ஊக்கப்படுத்து இதர காரணிகளை புறக்கணிப்பதும் மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும் என்றும், அதேபோல தொடர்ந்து இளைஞர்களுடனான உரையாடல்களும் இதற்கு தீர்வு காண வழிவகுக்கும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications