தூங்குவது மகாராஷ்டிராவில்.. சமைப்பது தெலங்கானாவில்.. மாநில எல்லை பிரிப்பால் இரு துண்டான வீடு.. அடடா
மும்பை: குறுக்கே வந்த எல்லை பிரிப்பால் மகாராஷ்டிரா, தெலங்கானா எல்லையில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் மகாராஷ்டிராவில் தூங்கி, தெலங்கானாவில் சமைத்து சாப்பிட்டு வரும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா.. மும்பையை தலைநகராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த மாநிலம் கர்நாடகா, தெலங்கானா, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா-கர்நாடகா இடையே தற்போது எல்லை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தான் இன்னொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மகாராஷ்டிரா-தெலங்கானா மாநிலங்களின் எல்லையை வீடு ஒன்று பகிர்ந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

விசித்திரமான வீடு
அதாவது இருமாநிலங்களின் எல்லை பகுதி என்பது அந்த அந்த வீட்டையே இரண்டாக பிரித்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம்... இது முற்றிலும் உண்மை. அந்த வீட்டில் உள்ள 4 அறைகள் மகாராஷ்டிரா மாநிலத்துடன், பிற 4 அறைகள் தெலங்கானா மாநிலத்திலும் உள்ளது. இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் இருமாநிலங்களுக்கும் வரி செலுத்தி நலத்திட்டங்களை பெற்று வருவது தெரியவந்துள்ளது. இந்த விசித்திரமான வீடு பற்றிய முழுவிபரம் வருமாறு:

மகாராஜ்குடா கிராமம்
மகாராஷ்டிராவும், தெலங்கானா மாநிலமும் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள சந்திராபூர் மாவட்டத்தின் மகாராஜ்குடா எனும் கிராமம் இருமாநிலங்களையும் பிரிக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் உத்தம் பவார். இவரது சகோதரர் பெயர் சந்து பவார். இவர்கள் 2 பேருக்கும் அந்த கிராமத்தில் சொந்தமாக நிலம் இருந்தது. இதனால் அவர்கள் வீடு கட்டி வசிக்க தொடங்கினார்.

1969ல் எல்லை பிரச்சனை
உத்தம்பவார்-சந்து பவார் ஆகியோர் 10 அறைகள் கொண்ட வீட்டை கட்டினர். இந்த வீட்டில் இரு சகோதரர்களும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். குடும்பத்தில் தற்போது 13 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் எல்லை பிரச்சனையை தொடர்ந்து கடந்த 1969ல் இருமாநிலங்களின் எல்லை தொடர்பான ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தான் உத்தம் பவார்-சந்து பவாரின் வீடு என்பது இருமாநிலங்களின் எல்லையில் அமைந்து இருப்பதும், மாநிலங்களின் எல்லைகள் வீட்டை இரண்டாக பிரிப்பதும் தெரியவந்தது.

இருமாநிலங்களுக்கும் வரி
அதன்படி வீட்டில் உள்ள 10 அறைகளில் சந்து பவாரின் 4 அறைகள் தெலங்கான மாநிலத்தில் உள்ளது. சமையல் அறையும் தெலங்கானா மாநிலத்துடன் சேர்ந்துள்ளது. இருப்பினும் உத்தம் பவாருக்கு சொந்தமான 4 அறைகள் மகாராஷ்டிரா மாநில நிலப்பகுதியில் அமைந்துள்ளது. கழிவறை பொதுவில் இருப்பது தெரியவந்துள்ளது. இருமாநில எல்லையில் வீடு உள்ளதால் அவர்கள் தற்போது மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களுக்கு வரி செலுத்தி வருவதோடு, இருமாநிலங்களில் நலத்திட்டங்களை பெற்று கொள்கின்றனர். மேலும் வாகனங்களின் பதிவெண்களையும் அவர்கள் மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

தெலங்கானாவில் அதிக பலன்
இதுபற்றி வீட்டின் உரிமையாளரான உத்தம் பவார் கூறுகையில், ‛‛ 1969 எல்லை ஆய்வின்போது எங்கள் வீட்டின் பாதிப்பகுதி மகாராஷ்டிராவிலும், மீதமுள்ள பாதி தெலங்கானா மாநிலத்திலும் இருப்பது தெரியவந்தது. இந்த வீட்டில் நாங்கள் 13 பேர் வசித்து வருகிறோம். இதன்மூலம் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் இருமாநில கிராம பஞ்சாயத்துகளுக்கும் வரி செலுத்தி வருகிறோம். இருப்பினும் மகாராஷ்டிரா அரசை காட்டிலும் தெலங்கானா அரசிடம் இருந்து அதிக பலன்களை பெற்று வருகிறோம்'' என்றார்.

இந்தியா-மியான்மர் வீட்டை போல்..
இதற்கு முன்பு இந்தியா, மியான்மர் எல்லையில் இருநாடுகளின் எல்லைப்பகுதிகளில் வீடு ஒன்று இருப்பது பற்றிய செய்தி வெளியானது. இது பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில் தான் தற்போது இந்தியாவுக்குள்ளேயே மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களின் எல்லைப்பகுதி ஒரு வீட்டின் மத்தியில் இருக்கும் தகவல் வெளியாகி இணையதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications