"டிரஸ்ஸே இல்லாட்டியும் பெண்கள் அழகுதான்".. ஆபாச பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்
மும்பை: ஆடையே இல்லாவிட்டாலும் பெண்கள் அழகாக இருப்பார்கள் என பேசியதற்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் பாபா ராம்தேவ்.
பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளரும் யோகா ஆசிரியருமான பாபா ராம்தேவ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு சிக்கிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் மகாராஷ்டிராவில் பெண்கள் குறித்து பேசி வம்பை விலைக் கொடுத்து வாங்கிவிட்டார்.
இவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் மகளிர் ஆணையம் சார்பில் இவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பிறகு தற்போது பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தானேவில் நிகழ்ச்சி
அவர் என்ன பேசினார் என்பதை பார்ப்போம். மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், அது போல் சுடிதார், சல்வார் அணிந்தாலும் அழகாகவே இருக்கிறார்கள். அது போல் எதுவும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர்
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸின் மனைவி அம்ருதா பட்னவீஸ் உள்ளிட்டோர் அமர்ந்திருந்த போது ராம்தேவ் இந்த கருத்தை தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. எதிர்க்கட்சியினர் பாபா ராம்தேவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஆபாசம்
ஒரு யோகா குரு இப்படி ஆபாசமாக பேசுவது கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். இவரது மோசமான கருத்துக்கு மகளிர் அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தின. இதையடுத்து ராம்தேவிடம் விளக்கம் கேட்டு மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சகாங்கர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
பாபா ராம்தேவின் ஆபாச கருத்து
மேலும் பாபா ராம்தேவ் தனது ஆபாச கருத்துக்கு மன்னிப்பும் கேட்க வேண்டும் என மகாராஷ்டிரா மகளிர் ஆணைய தலைவி ரூபாலி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவி ரூபாலிக்கு பாபா ராம்தேவ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பாதவது: பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தைப் பெற வேண்டும். பெண் கல்வியை பல வகைகளில் ஊக்குவித்து வருகிறேன்.
பெண்கள் மேம்பாடு
பெண்களை மேம்படுத்துவதற்காக உழைத்து வருகிறேன். பெண்களை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு துளி கூட இல்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோ முழுமையானது அல்ல. இருப்பினும் நான் கூறிய கருத்தால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பாபா ராம்தேவ் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
சிவசேனா கட்சி கண்டனம்
சிவசேனா கட்சியின் மூத்த நிர்வாகி சஞ்சய் ராவத், "பெண்களை ஆபாசமாக பாபா ராம்தேவ் பேசிய போது அம்ருதா பட்னவீஸ் ஏன் எதிர்க்கவில்லை?" சிவாஜி குறித்து அவதூறு கருத்தை ஆளுநர் கூறிய போது ஷிண்டே அரசு அமைதியாக வேடிக்கை பார்த்தது. அது போல் மகாராஷ்டிராவில் கிராமங்களை கர்நாடகா அரசு எடுத்து கொள்வதாக அந்த மாநில முதல்வர் மிரட்டிய போதுகூட ஷிண்டே அரசு அமைதி காத்தது. தற்போது பெண்களை பாபா ராம்தேவ் அவமதித்த போதும் அதே நிலைப்பாட்டில்தான் ஷிண்டே அரசு இருந்தது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது நாக்கை டெல்லியில் அடகு வைத்துவிட்டாரா என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.