வேலையை தொடங்கிய ஏக்நாத் ஷிண்டே..பட்னவிஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்புடைய வழக்கு சிபிஐக்கு மாற்றம்
மும்பை: பாஜகவை சேர்ந்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் கிரிஷ் மகாஜன் ஆகியோர் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மகராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு கவிழ்க்கப்பட்டு பாஜக கூட்டணியுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சில வாரங்களுக்கு முன் நிறுவப்பட்டது.
ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றது முதல் பல்வேறு உத்தரவுகள், மாற்றங்கள் அரசு தரப்பில் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பாஜகவை சேர்ந்த மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், இன்னாள் துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் மற்றும் பாஜக தலைவர் கிரிஷ் மகாஜன் ஆகியோர் தொடர்புடைய 2 வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளன.
'தருமம்’ தலை காக்கும்! இபிஎஸ் அணியில் ஓபிஎஸ் ஸ்லீப்பர் செல்? தகவலை கசிய விடுவது யார்? பறந்த ஆர்டர்!
பட்னவிஸ் வழக்கு
மகாராஷ்டிராவில் சிறப்பு புலனாய்வுத் துறை ரகசியமாக பதிவு செய்த செல்போன் அழைப்புகள் கசியவிடப்பட்டது தொடர்பாக அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிசிடம் அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறை வாக்குமூலம் பெற்றது.
சிபிஐக்கு மாற்றம்
இது குறித்து அப்போது அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த திலிப் வால்சே பாட்டில் தெரிவித்தபோது, சாட்சிக்காகவே தேவேந்திர பட்னவிஸிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறினார். ஆனால், அப்போதைய அரசு தன்னை இதில் சந்தேகத்திற்குரிய நபராகவே நடத்தியதாக தேவேந்திர பட்னவிஸ் கருதினார். இந்த நிலையில் அந்த வழக்கை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐக்கு மகாராஷ்டிரா அரசு மாற்றியுள்ளது.
கிரிஷ் மகாஜன் வழக்கு
அடுத்ததாக பணம் கேட்டு மிரட்டியதாகவும், குற்றச்சதிகளில் ஈடுபட்டதாகவும் அம்மாநில பாஜக தலைவர் கிரிஷ் மகாஜன் உள்ளிட்ட 28 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. ஜல்கானில் உள்ள கூட்டுறவு கல்வி நிறுவனமான ஜில்ஹா மராத்தா வித்யபிரசாரக் சஹாகரி சமாஜ் அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான விஜய் பாட்டில் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பணம் கேட்டு மிரட்டல்
கடந்த 2018 ஆம் தேதி தான் புனேவுக்கு சென்றபோது சதாசிவ் பெத் பகுதிக்கு சிலர் தன்னை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாகவும், தன்னை பதவி விலக சொல்லி மிரட்டியதாகவும், மீறினால் பொய் வழக்குகள் போடப்படும் என்றும் மிரட்டியதாக பாட்டில் புகாரளித்தார். அவரளித்த புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிரா போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
மகாராஷ்டிரா ஆட்சி கவிழ்ப்பு
கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் குஜராத், அசாம் மாநிலங்களில் உள்ள விடுதிகளில் தங்கி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்பாகவே உத்தவ் தாக்கரே பதவி விலகுவதாக அறிவித்தார். முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். இந்த நிலையில் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.