தாண்டவம் ஆடும் டவ்-தே புயல்... முன்னெப்போதும் இல்லாத சூறைக்காற்று.. மகாராஷ்டிராவில் 6 பேர் பலி
மும்பை: டவ்-தே புயல் காரணமாக மும்பையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதி தீவிர காற்றுடன் கனமழை பெய்த நிலையில், இதனால் மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்து, விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
அரேபிக் கடலில் உருவாகியுள்ள அதி தீவிர 'டவ்தே' புயலானது குஜராத் போர்பந்தர்-மகுவா இடையே கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், மணிக்கு 185 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் கண்ணின் முதல் பாதி கடக்கும்போது ஒருவித அமைதி நிலவும்.. பின்னர் பலத்த காற்று வீசும்.. வெதர்மேன்
இந்த புயல் காரணமாகக் குஜராத், மகாராஷ்டிரா, டாமன் மற்றும் டையூ பகுதிகளில் அதி தீவிர கன மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
|
விமான நிலையம்
கனமழை காரணமாக மும்பை சர்வதேச விமானம் பிற்பகல் 11 மணி முதல் மூடப்பட்டுள்ளது. முதலில் மாலை வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 பேர் பலி
மேலும் டவ்-தே புயல் காரணமாக மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் 6 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்துள்ளனர். நவி மும்பை மற்றும் உல்ஹாஸ்நகரில் சூறாவளிக் காற்று காரணமாக மரங்கள் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், சிந்துதுர்க் மாவட்டத்தில் ஒருவரும் ராய்காட் மாவட்டத்தில் மூவரும் உயிரிழந்தனர்.
சூறாவளிக் காற்று
டவ்-தே புயல் காரணமாக ஏற்பட்டுள்ள தேசம் குறித்து மதிப்பீடு செய்து, நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மும்பையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதி தீவிர காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ள நீர் புகுந்துள்ளன.
பாதுகாப்பான இடங்கள்
டவ்-தே புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க மும்பையில் மட்டும் ஆறு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும், கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளும் பாதுகாப்பான மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் கனமழை
அடுத்த சில மணி நேரத்தில் குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் டியூ பகுதிகளில் மணிக்கு 150 முதல் 175 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கனமழை பெய்யும் என்றும் எச்சிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் பாவ்நகர், அம்ரேலி, கிர் சோம்நாத் மற்றும் ஜுனகத் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆலோசனை
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத், கோவா முதல்வர்கள், டாமன் மற்றும் டையூ துணைநிலை ஆளுநர் ஆகியோருடன் தொலைப்பேசி வழியாக உரையாடினார்.டவ்-தே புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.