"ஐயோ, மூச்சு திணறுது".. வென்டிலேட்டர் கேட்டு போன் நம்பர் தந்த பெண்.. வாட்ஸ் ஆப்பில் வந்த "அதிர்ச்சி"
வென்டிலேட்டர் உதவி கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது
மும்பை: "என்னுடைய குடும்பத்தினருக்கு கொரோனா காரணமாக மூச்சுத் திணறலாக இருக்கிறது, வென்டிலேட்டர் தேவை.. யாராவது உதவி பண்ணுங்க" என்று ட்விட்டரில் தனது செல்போன் எண்ணைப் போட்டு உதவி கேட்டார் ஒரு பெண்... அவருக்கு அசிங்கமான போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர் சில விஷம மனம் படைத்தவர்கள்.
அந்தப் பெண் இந்த புகைப்படங்களை பார்த்து பெரும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்துள்ளார். அவரது பெயர் சாஸ்வதி சிவா... மும்பையைச் சேர்ந்தவர்.
இவரது குடும்பத்தில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வென்டிலேட்டர் உதவி கேட்டும், பிளாஸ்மா உதவி கேட்டும் ட்விட்டரில் செய்தி போட்டார். கூடவே தனது மொபைல் எண்ணையும் சேர்த்து போட்டார்.

சோஷியல் மீடியா
பலரும் இப்போது அரசையும், யாரையும் நம்பி இருப்பதில்லை. நேரடியாக சமூக வலைதளங்களில் சக மக்களிடமே உதவி கேட்கின்றனர். அதேபோலத்தான் சாஸ்வதியும் மெசேஜ் போட்டார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி வாட்ஸ் ஆப் மூலமாக வந்தது.

ட்வீட்
இதுகுறித்து அவர் சொல்லும்போது, "நான் ட்வீட் போட்ட சில மணி நேரத்திலேயே பலரும் உதவிக்கு வந்தனர். ஆறு மணி நேரத்தில் வென்டிலேட்டர் கிடைத்து விட்டது. ஆனால் அதன் பிறகுதான் எனக்கு துயரம் தொடர்ந்தது. இப்போது பிளாஸ்மா உதவி தேவைப்பட்டது. இதற்காக பல இடங்களிலும் முயன்றோம். கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் ஒரு ட்வீட் போட்டேன். அதை பல இடங்களிலும் ஷேர் செய்தேன். அதன் பிறகு நிறைய உதவிகள் கிடைத்தன.

ஆபாசம்
ஆனால் கூடவே ஒரு உபத்திரவமும் வந்தது. சில அறிமுகம் இல்லாத ஆண்கள் போன் செய்ய ஆரம்பித்தனர், மெசேஜ் அனுப்பினர். அதில் பலர் ஆபாசமாக பேசினர். பலர் ஆபாசப் படங்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்பினர். அதை வெளியில் சொல்ல முடியவில்லை. அவ்வளவு ஆபாசமாக அனுப்பினர். நான் "சிங்கிளா" என்று கேட்டு பலர் மெசேஜ் அனுப்பினர். எனது போட்டோவை பார்க்க வேண்டும் என்று சிலர் கேட்டனர். ஒருவர் முத்தம் கொடுத்து அதை மெசேஜில் அனுப்பி வைத்தார்.

ஆண்குறி
அத்தோடு நிற்கவில்லை. சிலர் வீடியோ காலில் வர ஆரம்பித்தனர். நான் எதையும் எடுக்கவில்லை. பெரும் மன உளைச்சலாகி விட்டது. 3 பேர் ஆண்குறி படத்தை அனுப்பி வைத்துள்ளனர். 7 பேர் தொடர்ந்து வீடியோ காலில் பேச முயன்று வருகின்றனர். மருத்துவ அவசரத்திலும் கூட ஆண்களின் இந்த வக்கிரப் புத்தி என்னை அதிர வைத்துள்ளது. தயவு செய்து பெண்களுக்கு நான் தரும் அறிவுரை இதுதான்.. எந்த சூழலிலும் உங்களது செல்போன் எண்ணை பொது வெளியில் பகிராதீர்கள். என்ன அவசரமாக இருந்தாலும் பகிராதீர்கள்" என்று கூறியுள்ளார் சாஸ்வதி.
என்ன ஜென்மங்களோ இவங்க எல்லாம்.. உதவி கேட்ட பெண்ணுக்கு இப்படி வக்கிரமான முறையில் போட்டோக்கள் அனுப்புவதை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.












Click it and Unblock the Notifications