மும்பையில் கொரோனா ஜெட் வேகம்.. 25 நாட்களில் பல மடங்கு அதிகரிப்பு.. ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்!
மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அங்கு மூன்றாவது அலை தொடங்கி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா தொற்றை இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா குறைந்து விட்டாலும், நமது அண்டை மாநிலமான கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதில் கேரளாவில் தினமும் சராசரியாக 25,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. நாட்டிலேயே இங்குதான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

மகாராஷ்டிராவை பொறுத்தவரை கேரளாவை போல் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இல்லையென்றாலும் தொற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,174 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகின. மாநில தலைநகர் மும்பையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மும்பையில் கொரோனாவுக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை நகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று அங்கு ஏற்கனவே மூன்றாவது அலை தொடங்கி விட்டதா? என்பது போல் இருக்கிறது. அதாவது மும்பையில் ஆகஸ்ட் 17 அன்று 196 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது 500-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 25 நாட்களுக்குள் தொற்று பல மடங்கு அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் 15-ம் தேதிக்கு பிறகு மும்பையில் பதிவான அதிகபட்ச ஒருநாள் பாதிப்பும் இதுவாகும். இதேபோல் நாசிக் பகுதியிலும் 914 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு நகரங்களிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா மும்பையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்பதால் மக்கள் விழா பொருட்களை வாங்க கடைகளில் கூடியதால், மேலும் சொந்த ஊர்களுக்கு பேருந்து, ரயில்களில் கூட்டமாக பயணம் செய்வதால் இதன் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்து இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா அதிகரித்து வருவதால் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், வீட்டில் இருந்தே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று மக்களை அறிவுறுத்தி இருக்கிறார்.

மகாராஷ்டிராவை பொறுத்தவரை எட்டு பிராந்தியங்களில் மட்டும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. மும்பை பகுதியில் 990 வைரஸ் பாதிப்பும், புனேவில் 1,669 புதிய பாதிப்புகளும், நாசிக் பிராந்தியத்தில் 914 பாதிப்புகளும், கோலாப்பூர் 442, லத்தூரில் 112, அகோலா 19, அவுரங்காபாத் 20 மற்றும் நாக்பூர் பிராந்தியத்தில் 8 பாதிப்புகளும் கண்டறிப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் விகிதம் 97.09 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.12 சதவீதமாகவும் உள்ளது.
மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் சற்று குறைந்து ஆறுதல் அளிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 65 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக 20 இறப்புகள் புனே பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன, நாசிக் பகுதியில் 19 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.மும்பை பிராந்தியத்தில் 17 உயிரிழப்புளும், கோலாப்பூரில் 5, லத்தூரில் 3 மற்றும் அவுரங்காபாத் பிராந்தியத்தில் ஒரு உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications