மகாராஷ்டிரா முதல்வராக பிராமணர் வர வேண்டும்! மத்திய அமைச்சர் ராவ்சாகேப் பரபர பேச்சு
மும்பை: ‛‛மகாராஷ்டிரா முதல்வராக பிராமணர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை பார்க்க விரும்புகிறேன்'' என மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே பரபரப்பாக கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர் ராவ்சாகேப் தன்வே. இவர் ரயில்வே, நிலக்கரி மற்றும் கனிம வளத்துறையின் இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் பரசுராமர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா பகுதியில் நடந்த பரசுராமர் ஜெயந்தி விழாவில் இவர் பங்கேற்றார்.

அப்போது ஒருவர் பேசுகையில், ‛‛உள்ளாட்சி அமைப்புகளில் பிராமணர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் ராவ்சாகேப் தன்வே பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "நான் பிராமணர்களை கார்ப்பரேட் தலைவர்களாகவோ அல்லது குடிமை பணி தலைவர்களாகவோ பார்க்க விரும்பவில்லை. ஒரு பிராமணரை இந்த மாநிலத்தின் முதல்வராக பார்க்க விரும்புகிறேன். அரசியலில் சாதிவெறி அதிகம் வந்துவிட்டது, அதை புறக்கணிக்க முடியாது. ஆனால் சமூகங்களை ஒன்றாக வைத்திருக்கக்கூடிய ஒரு தலைவர் இருக்க வேண்டும்" என்றார்.
இதற்கு மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛யார் வேண்டுமானாலும் மகாராஷ்டிராவின் முதல்வராக ஆகலாம். மூன்றாம் பாலினத்தவர் அல்லது எந்த மதம், சாதியை சேர்ந்த ஆண், பெண்களில் யார் வேண்டுமானாலும் முதல்வராக ஆகலாம். இவர்களுக்கு ஒரேயொரு தகுதி தான் வேண்டும். அதாவது மகாராஷ்டிராவில் முதல்வராக பொறுப்பு வகிக்க சட்டசபையில் 145 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications