மகாராஷ்டிரா தேர்தல்:பாஜக அணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை- நேரடியாக இறங்கிய "சாணக்கியர்" அமித்ஷா!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக களமிறங்கி இருக்கிறார். மும்பையில் முகாமிட்டுள்ள அமித்ஷா, சிவசேனா தலைவரும் முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, என்சிபி தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவார் மற்றும் பாஜக மூத்த தலைவரான துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கும் ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுடன் சேர்ந்து தேர்தல் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இந்தியத் தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ந் தேதி நடைபெறும். இதன் பின்னர் உடனடியாக மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம். மகாராஷ்டிராவுக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் வெவ்வேறு தேதிகளில் தேர்தல் நடைபெறவும் வாய்ப்பிருக்கிறது.
மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்தது. ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இரு கட்சிகளிடையே மோதல் ஏற்பட 25 ஆண்டுகால சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது.
கவிழ்க்கப்பட்ட உத்தவ் தாக்கரே: இதன் பின்னர் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை அமைத்தது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். ஆனால் இந்த ஆட்சியை பாஜக நீடிக்கவில்லை.
புதிய கூட்டணி ஆட்சி: முதலில் சிவசேனாவை உடைத்து உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்தது பாஜக. பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டேவையே முதல்வராக்கியது பாஜக. இதன் பின்னர் தேசியவாத காங்கிரஸை சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவாரை வைத்து உடைத்து ஆட்சியில் இணைத்துக் கொண்டது.
தொகுதிப் பங்கீடு: தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு என்பது மிகப் பெரும் இடியாப்ப சிக்கலாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது.
நேரடியாக களமிறங்கிய அமித்ஷா: இதனால் மத்திய உள்துறை அமைச்சர் தற்போது பாஜக கூட்டணிக் கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் நேரடியாகவே களமிறங்கிவிட்டார். மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக வந்துள்ள அமித்ஷா, மும்பையில் ஏக்நாத் ஷிண்டே- அஜித் பவார்- துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை இன்று நடத்தினார்.
பாஜகவின் வியூகம்: மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக மட்டும் 150 முதல் 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. எஞ்சிய தொகுதிகளைத்தான் சிவசேனாவும் அஜித் பவாரும் பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டவட்டமான முடிவு. இதனையே இன்றைய ஆலோசனைக் கூட்டத்திலும் ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவாரிடமும் அமித்ஷா கறாராக கூறியிருக்கிறாராம். முன்னதாக மாநில பாஜக தலைவர்களை சந்தித்த அமித்ஷா, 150 முதல் 170 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறோம்.. இதுதான் நிலைப்பாடு என தெளிவுபடுத்தி இருந்தாராம்.












Click it and Unblock the Notifications