40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை குறிவைத்தார் என நினைக்கவில்லை! சரத்பவார் அதிர்ச்சி
மும்பை: 40 எம்எல்ஏக்களுடன் அசாம் சென்ற ஏக்நாத் ஷிண்டே முதல்வர பதவியை எதிர்பார்த்தார் என நினைக்கவில்லை என்று மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார்.
மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டாக சிவசேனா, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சியை நடத்தின. உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.
இந்த கூட்டணி மீது சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். இவர்கள் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். இவர்கள் மீண்டும் மகாவிகாஷ் அகாடி கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அடிமட்ட தலைவரில் இருந்து முதல்வரான ஏக்நாத் ஷிண்டே! புகழ்ந்து தள்ளி வாழ்த்திய பிரதமர் மோடி!
முதல்வராக ஏக்நாத் ஷிண்டே
இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் நிலை உருவானது. நேற்று இரவு உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டு வியூகம் வகுத்தது. இதனைத்தொடர்ந்து அம்மாநில ஆளுநர் கோஷ்யாரியை தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். நேற்று இரவு 7.30 மணிக்கு முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிசும் பதவியேற்றனர்.
இப்படி நினைக்கவில்லை
இந்நிலையில் சிவசேனா கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:‛‛அசாமுக்கு எம்எல்ஏக்களை வழிநடத்தி சென்ற ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை விட உயர்வான பதவியை எதிர்பார்த்தார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் டெல்லி பாஜக, நாக்பூர் ஆர்எஸ்எஸ் உத்தரவுப்படி ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் முதல் அமைச்சராக இருந்த ஒருவரை துணை முதல்வராக பொறுப்பேற்க கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சக்தியை நிரூபித்த ஷிண்டே
ஆனாலும் கூட்டணியில் இருந்த 40 எம்எல்ஏக்களை மாநிலத்தை விட்டு கவுஹாத்திக்கு அழைத்து சென்று சமரசம் செய்து கொள்ளாமல் இருந்து தனது சக்தியை நிரூபித்தார். இருப்பினும் அவர்களை சிவசேனாவை விட்டு விலக வைத்தது உள்ளிட்டவை எல்லாம் முன்னேற்பாடுகள் இன்றி நடக்கவில்லை'' என்றார்.
வாழ்த்து தெரிவித்த சரத் பவார்
ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பிறகு சரத்பவார் அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் டுவிட்டர் பக்கத்தில் ‛‛மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிரா மாநிலத்தின் நலன் அவரால் பாதுகாக்கப்படும் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.