மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே அரசு ஜூன் 30-ல் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவில்லை: ஆளுநர் மாளிகை
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு 30-ந் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளதாக வெளியான கடிதங்கள் போலியானவை; அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அம்மாநில ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது சிவசேனா கட்சியின் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் வேற முகம் காட்டிய சிவசேனா..வெலவெலத்த அதிருப்தி கோஷ்டிக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு
போர்க்கொடி
முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய எம்.எல்.ஏக்கள் முதலில் பாஜக ஆளும் குஜராத் மாநிலம் சூரத் சென்றனர். இதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான அஸ்ஸாமின் குவஹாத்தியில் அனைவரும் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில்போர்க்கொடி தூக்கிய 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முதல்வர் உத்தவ் தாக்கரே நடவடிக்கை மேற்கொண்டார்.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்
தங்களை தகுதி நீக்கம் செய்வதை எதிர்த்து 16 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதேநெரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பல்வேறு வகைகளில் சிவசேனா கடும் மிரட்டல் விடுத்தது.
பட்னாவிஸ் டெல்லி பயணம்
இதனிடையே மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் தொடர்பாக அவசர பயணமாக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் உடனே மும்பை திரும்பிய பட்னாவிஸ், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தார். கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று தற்போதுதான் ஆளுநர் கோஷ்யாரி குணமடைந்தார்.
ஆளுநர் உத்தரவு என்ற தகவலால் பரபரப்பு
ஆளுநர் கோஷ்யாரியுடனான சந்திப்பின் போது, உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆகையால் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று பட்னாவிஸ் வலியுறுத்தினார். இதனையடுத்து "மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை ஜூன் 30-ந் தேதி காலை 11.30 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது உத்தவ் தாக்கரே அரசு தமது பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் கோஷ்யாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்" என தகவல்கள் பரவின. ஜூன் 29-ந் தேதியிட்ட ஆளுநரின் கையெழுத்துடனான கடிதமும் ஊடகங்களில் வெளியாகின. ஆனால் இதனை ஆளுநர் மாளிகை திட்டவட்டமாக மறுத்ததுடன் அப்படியான ஒரு கடிதம் போலி எனவும் விளக்கம் அளித்தது.