நாங்கள் 162 பேர்.. மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி உருவாக்கிய புது வாசகம்.. தேசிய அளவில் டிரெண்ட்!
மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் பலத்தை வெளிக்காட்டும் வகையில் ''நாங்கள் 162 (we are 162)'' என்ற வாசகத்தை உருவாக்கி உள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் பலத்தை வெளிக்காட்டும் வகையில் ''நாங்கள் 162 (we are 162)'' என்ற வாசகத்தை உருவாக்கி உள்ளது.
மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பங்கள் அரசியல் வல்லுனர்களாலேயே கணிக்க முடியாத அளவுக்கு சென்று கொண்டு இருக்கிறது. அங்கு தற்போது பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். கடந்த சனிக்கிழமைதான் அவர் பதவி ஏற்றார்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவிற்கு ஆதரவு அளித்தார். அதோடு அஜித் பவார் துணை முதல்வராகவும் மகாராஷ்டிராவில் பதவி ஏற்றார்.
பாஜகவிற்கு பலன் அளிக்கும் எதையும் செய்ய மாட்டோம்.. மாஸ் உறுதிமொழி எடுத்த சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள்
யார் பக்கம்
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்கள். அவர்கள் சரத் பவார் பக்கம் இருக்கிறார்களா? அல்லது அஜித் பவார் பக்கம் இருக்கிறார்களா என்று கேள்வியை எழுந்தது. இதையடுத்து சரத் பவார் என்சிபி எம்எல்ஏக்களை எல்லாம் உடனடியாக ஹோட்டலுக்கு அனுப்பி பாதுகாத்தார்.
இன்று அணிவகுப்பு
இந்த நிலையில் இன்று இவர்கள் எல்லோரும் ஒன்றாக அணிவகுத்தனர். மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் 162 பேரும் இன்று மும்பை ஹயாத் ஹோட்டலில் செய்தியாளர்கள் மற்றும் மக்கள் முன்னிலையில் தோன்றினார்கள். தங்கள் கூட்டணியின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வகையில் அவர்கள் மக்கள் முன்னிலையில் தோன்றினார்கள்.
என்ன ஆதரவு
சிவசேனாவிற்கு 45 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 57 சிவசேனா எம்எல்ஏக்கள் 53 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. இதனால் 162 எம்எல்ஏக்களுடன் சிவசேனா கட்சி மக்கள் முன்னிலையில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
என்ன வாசகம்
இதற்காக சிவசேனா ''நாங்கள் 162 (we are 162)'' என்ற வாசகத்தை உருவாக்கியது. மூன்று கட்சி எம்எல்ஏக்களும் டிவிட்டரில் இந்த வாசகம் உள்ள புகைப்படத்தை வெளியிட்டனர். அதேபோல் மும்பை ஹயாத் ஹோட்டலுக்கு வெளியே ''நாங்கள் 162 (we are 162)'' என்று போஸ்டர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவில் பொதுவாக அரசியல் ரீதியாக போராட்டங்கள் நடக்கும் போது இது போன்ற வாசகங்கள் பயன்படுத்தப்படும்.
பெரிய வைரல்
இந்த நிலையில் இந்த வாசகம் தற்போது தேசிய அளவில் வைரலாகி வருகிறது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா தொண்டர்கள் பலர் இது தொடர்பாக டிவிட் செய்து வருகிறார்கள். பாஜகவினர் பலரும் இதற்கு எதிராக கடுமையாக டிவிட் செய்து வருகிறார்கள்.