மகாராஷ்டிரா தேர்தல்: உத்தவ் தாக்கரே சிவசேனாவை தொடர்ந்து முதல்வர் பதவிக்கு துண்டு போடும் காங்கிரஸ்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாடியில் முதல்வர் பதவிக்கான 'சண்டை' நீடிக்கிறது. மகா விகாஸ் அகாடியின் முதல்வர் வேட்பாளர் உத்தவ் தாக்கரே மட்டுமே என்கிறது சிவசேனா. இந்த கோதாவில் தற்போதும் காங்கிரஸும் கை கோர்த்துள்ளது. மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நானா படோலுக்கும் முதல்வர் பதவி வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் தேதி அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 2-வது வாரத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடும் என்பது கணிப்பு. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு அடுத்த வாரம் 14 பேர் கொண்ட இந்திய தேர்தல் ஆணையக் குழு பயணம் மேற்கொள்கிறது. அப்போது இரு மாநிலங்களிலும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
இதனிடையே மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி இரு தரப்பும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. இரு கூட்டணிகளும் தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக நிறைவு செய்ய முயற்சிக்கின்றன. அதே நேரத்தில் இரு கூட்டணிகளிலுமே முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் அனல் பறக்கிறது.
மகா விகாஸ் அகாடியில் உத்தவ் தாக்கரேதான் முதல்வர் வேட்பாளர் என்பதில் சிவசேனா உறுதியாக உள்ளது. சரத்பவாரின் என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் இதுவரை அமைதி காத்து வந்தன. ஆனால் தற்போது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நானா படோலின் ஆதரவாளர்கள் அவருக்குதான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இது தொடர்பாக நாக்பூர் காங்கிரஸ் தலைவர் விகாஸ் தாக்கரே கூறுகையில், விதர்பாவைச் சேர்ந்த ஒருவரைத்தான் முதல்வராக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம். அதற்காகவே நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். சட்டசபை தேர்தலில் விதர்பா பிராந்தியத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றால் நானா படோல்தான் முதல்வர் என அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை ராகுல் காந்தியிடம் முன்வைக்க இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications