சிகிச்சைக்குப் பணமில்லை... மன உளைச்சலால் 80 வயது தாயைக் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!
வறுமை காரணமாக வயதான தாயைக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயின் மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாததால், 80 வயது தாயை கழுத்தை அறுத்து மகனே கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தகிசர் பகுதியில் வசித்து வருபவர் யோகேஷ் (53). தந்தையும், சகோதரனும் இறந்து விட்டதால் 80 வயது தாய் லலிதாவை இவரே பராமரித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் யோகேஷின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விடவே, தாயைக் கவனித்துக் கொள்வதற்காக தனது வேலையை ராஜினாமா செய்தார் யோகேஷ். இதனால் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர் தாயும், மகனும்
இந்நிலையில் வயோதிகம் காரணமாக அடிக்கடி நோய்வாய்ப் பட்டுள்ளார் லலிதா. அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் திண்டாடியுள்ளார் யோகேஷ். இதனால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான யோகேஷ், தாயைக் கொன்றுவிட திட்டமிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று இரவு அதிகளவு தூக்க மாத்திரைகளைப் பாலில் கலந்து கொடுத்து தன் தாயைக் கொல்ல முயற்சித்துள்ளார் யோகேஷ். ஆனால், நள்ளிரவு எழுந்து பார்த்த போது, லலிதா நன்றாக தூங்கிக் கொண்டிருக்கவே, அதிர்ச்சி அடைந்த யோகேஷ், தலையணையை வைத்து அழுத்தி லலிதாவைக் கொல்ல திட்டமிட்டார். ஆனால், அம்முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இதனால், லலிதாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் யோகேஷ். லலிதாவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தார் இது தொடர்பாக போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், யோகேஷைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாய்க்கு மருத்துவச் செலவு செய்ய இயலாத காரணத்தினாலேயே இந்தக் கொலையைச் செய்ததாக யோகேஷ் ஒப்புக் கொண்டார். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.