சமமான அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜக-சிவசேனா இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை: நிதின் கட்காரி
மும்பை: மகாராஷ்டிராவில் சமமான அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்களாகியும் இம்மாநிலத்தில் புதிய அரசு இன்னமும் அமையவில்லை.
பாஜக தலைமையிலான அரசியல் சமமான அதிகாரப் பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி ஆகிய நிபந்தனைகளை சிவசேனா முன்வைக்கிறது. இவற்றை பாஜக நிராகரித்து வருவதால் புதிய அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் இணைந்து புதிய அரசு அமைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இன்று இரவுக்குள் புதிய அரசு அமையாத நிலையில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் மும்பையில் பாஜக தலைவர்களுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று ஆலோசனை நடத்தினார். புதிய ஆட்சி அமைப்பதில் இருக்கும் முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நிதின் கட்காரி சந்திக்கக் கூடும் என கூறப்பட்டது.
ஆனால் இதனை நிராகரித்துள்ள நிதின் கட்காரி, நிகழ்ச்சிகளில் பங்கேற்கவே மும்பை வந்திருக்கிறேன். எந்த ஒரு அரசியல் தலைவரையும் நான் சந்திக்கும் திட்டம் இல்லை. சிவசேனாவுடன் சமமான அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜக எந்த ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்ளவும் இல்லை என்றார். மேலும் சிவசேனாவின் தலைவரான மறைந்த பால்தாக்கரே கூட, எந்த கட்சி பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை பெற்றிருக்கிறதோ அக்கட்சிக்குத்தான் முதல்வர் பதவி என்பதை முன்னர் கூறியிருந்தார் எனவும் நிதின் கட்காரி சுட்டிக்காட்டினார்.