கொரோனா விஸ்வரூபம் .. ஞாயிறு லாக்டவுன்- இரவு நேர ஊரடங்கு.. 8 மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் அமல்!
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் லாக்டவுன், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன.
நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் 47,000-த்தை தாண்டியுள்ளது. ஒருநாள் கொரோனா மரணங்கள் 213 ஆகவும் அதிகரித்துள்ளது.
நிஜ முகத்தை பார்க்காம போயிட்டேனே.. அமித் ஷா கொடுத்த அதிர்ச்சியால் உடைந்த மம்தா.. மனசே விட்டுட்டாரு!
மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,000-த்தை தாண்டியிருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளன.
மகாராஷ்டிரா உச்சகட்ட பாதிப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா கால கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகள் உள்ளிட்டவை 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார், அரசு அலுவலகங்களும் 50% ஊழியர்களுடன் மட்டும் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் பாதிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உக்கிரமாக இருக்கிறது. இதனையடுத்து 11 மாவட்டங்களிலும் மார்ச் 31 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொது நிகழ்வுகளுக்கு தடை
குஜராத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் பொதுநிகழ்வுகளுக்கு அனுமதி மறு9க்கப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகையின் போது ஒருவருக்கு ஒருவர் வண்ண பொடி பூசுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு லாக்டவுன்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழுமையான ஒருநாள் லாக்டவுன் கொரோனா பாதீப்பு அதிகம் உள்ள 3 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலை 11 மணி, இரவு 7 மணிக்கு சைரன் ஒலி எழுப்பப்படும். அப்போது முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்வர்.
இரவு ஊரடங்கு
ராஜஸ்தான் மாநிலத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துக்குள் நுழையும் பிற மாநிலத்தவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர். இன்று முதல் இரவு 10 மணிக்குப் பின்னர் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். 5 பேருக்கு கொரோனா தொற்று இருந்தால் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படும்.
கோவா கட்டுப்பாடுகள்
கோவா மாநிலத்தில் ஹோட்டல்கள், பொழுது போக்கு நிகழ்வு இடங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் எனவும் மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
சத்தீஸ்கரிலும் கடும் கட்டுப்பாடுகள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் ஞாயிறு முதல் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் தொடர்ந்து இயங்குமாம். பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.
அந்தமான் தீவுகள்
அந்தமான் தீவுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்வோர் கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.