நான் தான் முதல்வர் -பட்னவீஸ்; சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்.. ராவத்.. நீடிக்கும் இழுபறி!
மும்பை: மகாராஷ்டிரத்தில் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஆட்சி அமைப்பது யார் என்பதில் கூட்டணி கட்சிகளான பாஜக- சிவசேனாவுக்கு இடையே இழுபறி நீடிக்கிறது. சிவசேனா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை கேட்கிறது. ஆனால் பாஜகவோ தர மறுக்கிறது.
எனினும் பெரும்பான்மை இல்லாததால் பாஜக, சிவசேனாவை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ், என்சிபி ஆதரிக்குமா என்ற எதிர்பார்ப்பில் சிவசேனா உள்ளது.
சிவசேனா- தேசியவாத காங். இணைந்து புதிய அரசு... ஊசலாட்டத்தில் சரத்பவார்? சோனியாவுக்கும் 'செக்'
தேர்தலில் 56 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற சிவசேனா தங்களுக்கு 175 எம்எல்ஏக்களின் பலம் உள்ளதாக கூறுகிறது. மகாராஷ்டிரத்தின் முதல்வராக உள்ள தேவேந்திர பட்னவீஸ், அமித்ஷாவை சந்திப்பதும், சஞ்சய் ராவத் ஆளுநரை சந்திப்பதும், சரத்பவார் சோனியாவை சந்திப்பதும் என மும்பையும் டெல்லியும் பரபரப்பாக இருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில் சிவசேனாவை சேர்ந்தவர் மட்டுமே மகாராஷ்டிரத்தின் முதல்வராவார். மும்பையின் முகமும் அரசியல் களமும் மாறபோவதை நீங்கள் காணத்தான் போகிறீர்கள்.
என்ன சொல்கிறீர்கள், மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறதா? அது குழப்பம் இல்லை. நீதிக்கும் உரிமைக்கும் இடையே நாங்கள் நடத்தும் போராட்டம் ஆகும். இந்த போராட்டத்தில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்றார் ராவத்.