மும்பையை சூறையாடிய மழை... இன்னும் 4 நாளைக்கு வச்சு செய்யும் - ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்
மும்பை, தானே, ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இங்கு அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
மும்பை: தென்மேற்குப் பருவமழை மும்பை மாநகரில் தீவிரமடைந்துள்ளது. நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. ஞாயிறன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு மும்பை உள்ளிட்ட கொங்கன் மண்டல பகுதியில் மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த 3ஆம் தேதி தொடங்கி பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 9ஆம் தேதி தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது.
ஆரம்ப நாள் முதலே மும்பை நகரில் மழை வெளுத்து வாங்கியது. சாலைகளும் ரயில் தண்டவாளங்களும் வெள்ளநீரில் மூழ்கின. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுரங்கப்பாதைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விடாமல் கொட்டித்தீர்த்த மழை
நேற்று காலை நேரத்தில் மழை சற்று ஒய்வெடுக்கவே மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்ப தொடங்கியது. குறிப்பாக சாலை, ரயில் போக்குவரத்து சீராக நடந்து வந்தது. நேற்று பிற்பகலுக்கு மேல் மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. நேற்றிரவு பெரும்பாலான இடங்களில் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.
வெள்ளத்தில் மிதக்கும் மும்பை
நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தகிசர் பகுதியில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. போாிவிலி பகுதியில் 10 செ.மீ மழையும் காந்திவிலி, பாந்த்ரா பகுதிகளில் 7.9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மும்பை போல தானே, நவிமும்பை மற்றும் பால்கர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளிக்கிறது மும்பை மாநகரம்.
கொட்டித்தீர்த்த மழை
இந்தநிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மும்பை உள்ளிட்ட கொங்கன் மண்டல பகுதியில் மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதற்காக மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமையன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலெர்ட்
நாளைய தினம் மும்பை மாநகரத்தில் மிக மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
மும்பை மாநகராட்சி தயார்
வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள ரெட் அலெர்ட் எச்சரிக்கையை அடுத்து மும்பை மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதில் மண்டல கட்டுப்பாட்டு அறைகள், அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் தேவையான மனித வளத்துடன் அனைத்து உபகரணங்கள், சாதனங்களுடன் மிகுந்த எச்சாிக்கையுடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.