காய்ந்து போன சப்பாத்தி.. உலுக்கிய ஒரு புகைப்படம்.. அவுரங்காபாத் ரயில் விபத்தின் வலி மிகுந்த சாட்சி!
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் இன்று ரயில் விபத்தில் 17 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியானார்கள்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் இன்று ரயில் விபத்தில் 17 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியானார்கள். அந்த விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க அடுத்தடுத்து அசம்பாவிதம் நடந்து வருகிறது. கொரோனாவிற்கு இடையே நேற்றுதான் ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து 14 பேர் பலியானார்கள். அந்த அதிர்ச்சியின் சுவடு காயும் முன் இன்று மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாகி உள்ளனர்.
பலியான எல்லோரும் மகாராஷ்டிராவில் ஜல்னா பகுதியில் இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றி உள்ளனர். இவர்கள் எல்லோரும் புலம்பெயர் தொழிலாளர்கள்.
சாலையில் நடந்தால் போலீஸ் பிடிப்பார்கள் என தண்டாவாளத்தில் நடந்ததால் ஏற்பட்ட அவுரங்காபாத் விபரீதம்
எந்த ஊர்
இவர்கள் எல்லோரும் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஜல்னாவில் இருந்து புவாசல் பகுதிக்கு ரயில் ஏறுவதற்காக இவர்கள் நடந்து சென்றுள்ளனர். மொத்தம் 38 கிமீ தூரம் நடந்து சென்றுள்ளனர். போலீஸ் பிடிக்கும் என்பதால் ரயில் தண்டவாளம் இருக்கும் வழியாக சென்றுள்ளனர். புவாசல் சென்றால் அங்கிருந்து மத்திய பிரதேசத்திற்கு ரயிலில் செல்லலாம் என்று நம்பி இவர்கள் சென்றுள்ளனர். ஆனால் வீடு செல்லும் இந்த சோகம் நடந்துள்ளது.
தண்டவாளத்தில் தூங்கினார்கள்
நடந்து நடந்து களைத்து போன அவர்கள் எல்லோரும் ஒன்றாக அதிகாலையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கி உள்ளனர். ரயில் எதுவும் வராது, கொஞ்சம் தூங்கலாம் என்று நம்பி படுத்துள்ளனர். சுற்றி முட்பதற் இருந்த காரணத்தால் தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கி இருக்கிறார்கள். கர்மாட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் நேரம் சரக்கு ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்து, வேகமாக அவர்கள் மீது ஏறி சென்றுள்ளது.
எல்லோரும் பலி
இதில் சம்பவ இடத்தில் 17 பேர் பாலியனார்கள். இரண்டு பேர் மோசமாக காயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில்
விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. அந்த பணியாளர்கள் தங்களின் காலை உணவுக்காக வைத்து இருந்த சுட்ட சப்பாத்தியின் புகைப்படங்கள் ஆகும் இது. காய்ந்து போன நிலையில் சப்பாத்திக்கள் தண்டவாளத்திற்கு வெளியே சிதறி கிடந்தது. இந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
லாக்டவுன் எப்படி
திடீர் லாக்டவுன் காரணமாக வெவ்வேறு இடங்களில் சிக்கிக் கொண்ட இவர்கள் இப்போதுதான் தங்கள் சொந்த ஊருக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இரண்டு மாதம் வருமானம் இன்றி, உணவு இன்றி கஷ்டப்பட்ட இவர்கள் உறவினர்களை சந்திக்கும் சந்தோஷத்தில் சென்றனர். ஆனால் வீட்டிற்கு செல்லும் முன், பரிதாபமாக விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்.
ஒரு படம்
இவர்களின் வாழ்க்கை முறையை, வறுமையை உணர்த்தும் வகையில் இந்த ஒற்றை படம் அமைந்துள்ளது. இந்தியாவின் மனசாட்சியை உலுக்கும் வகையில் இந்த படம் அமைத்துள்ளது. கொரோனா காரணமாக போகும் உயிரும், கொரோநா லாக்டவுனால் இப்படி பலியாகும் உயிர்களும் ஒன்றுதான். இந்தியா முழுக்க மெட்ரோ தொடங்கி பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ஆதாரமாக இருப்பது இப்படி புலம்பெயர்ந்த பணியாளர்கள்தான்.
|
மோசமான நிலை
எந்த சம்பளம் கொடுத்தாலும் அதை பெற்றுக்கொண்டு வேலை பார்ப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். எந்த இடம் கொடுத்தாலும் கேள்வி கேட்காமல் அங்கேயே தங்கி, குளித்து, உண்டு , கொடுத்த வேலையை சரியாக செய்வதில் புலம்பெயர்ந்த பணியாளர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள். ஆனால் இப்படிபட்ட புலம்பெயர்ந்த பணியாளர்களுக்குத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அழுத்தம் உள்ளது
பெரிய சிட்டிக்களில் குற்ற சம்பவம், திருட்டு நடந்தால் போலீஸ் முதலில் சந்தேகிப்பது புலம்பெயர்ந்த பணியாளர்களைத்தான். அதோடு வெவ்வேறு மாநிலங்களில் இவர்களுக்கு இன, மொழி ரீதியான அழுத்தங்களும் உள்ளது. இத்தனை அழுத்தங்களுக்கு இடையே வேலை பார்க்கும் இவர்களுக்கு நாம் பரிசாக கொடுப்பது என்னவோ இதுபோன்ற மரணங்கள்தான்!