என்னது ஐக்கிய முற்போக்கு கூட்டணியா? அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. காங்.க்கு குட்டு வைத்த மமதா
மும்பை: காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பதெல்லாம் இப்போது இல்லை என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி சாடியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக மமதா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி தொடருகிறது. மேற்கு வங்கத்தை தாண்டி பிற மாநிலங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கட்டமைப்பதில் மமதா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார்.
அண்மையில் கோவா மாநிலத்துக்கு சென்ற மமதா பானர்ஜி, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து டெல்லி, ஹரியானா, பீகாரிலும் திரிணாமுல் காங்கிரஸ் காலூன்ற இருக்கிறது.
உலக எய்ட்ஸ் தினம்: எய்ட்ஸ், எச்ஐவி பாதிப்பு ஏற்படுத்தும் கிரகங்கள் - ஜோதிட ரீதியான காரணங்கள்
பாஜக எதிர்ப்பு அணி
இன்னொரு பக்கம், தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை மமதா தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் அண்மையில் முகாமிட்டு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை மமதா பானர்ஜி சந்தித்தார். இதன் அடுத்த கட்டமாக மகாராஷ்டிராவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார் மமதா. மும்பையில் இன்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், முதல்வர் உத்தவ் தாக்கரே மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் மமதா.
சரத்பவாருடன் சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் மமதா பானர்ஜி சந்தித்து பேசினார். சரத்பவாருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு மமதா பானர்ஜி அளித்த பேட்டி: சரத்பவார் மிக மூத்த தலைவர். அவர் எதைச் சொன்னாலும் என்னால் ஏற்க முடியும். ஆனால் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பது இப்போது இல்லை. அரசியல் ரீதியாக இந்த நாட்டில் இருந்து பாஜக அப்புறப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் போது கோவாவில் ஏன் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடக் கூடாது?
மாநில கட்சிகளுக்கு அழைப்பு
அனைத்து மாநில கட்சிகளும் ஒருங்கிணைந்து நின்றால் பாஜகவை எளிதாகவே வீழ்த்திவிட முடியும். மேற்கு வங்கத்தைவிட்டு வெளியே வந்து பல்வேறு தலைவர்களை நான் சந்தித்து வருகிறேன். இதேபோல் அனைத்து மாநில கட்சித் தலைவர்களும் பாஜகவுக்கு எதிராக களம் காண வெளியே வர வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார். மற்ற நேரங்களில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுவிடுகிறது. விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது கூட தேர்தல் ஆதாயத்துக்காகவே. அரசியல்வாதிகள் அதிகம் பேசுவார்கள். நான் பேசுவதுடன் அதை செயல்படுத்திக் காட்டுவதிலும் முனைப்புடன் இருக்கிறேன். நாகரிகமாக குடிமை சமூகத்துக்கு ஊபா போன்ற சட்டங்கள் தேவையற்றவை. எந்த ஒரு விசாரணை அமைப்பு மீதும் தனிப்பட்ட முறையில் எனக்கு கோபம் இல்லை. ஆனால் இந்த விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.
எதிர்க்கட்சிகள் ஒற்றுமை
மமதாவுடனான சந்திப்பு குறித்து தேசியவாத தலைவர் சரத்பவார் கூறுகையில், பாஜகவை எதிர்க்கிற அனைத்து அரசியல் கட்சிகளும் எங்களுடன் இணைவதை நாங்கள் வரவேற்கிறோம். யாரையும் தவிர்த்துவிட்டு செயல்படவேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.