"மும்பையே பற்றி எரியும் என சொன்னீங்க.. தீக்குச்சி கூட எரியவில்லை" - உத்தவை சீண்டிய பட்னாவிஸ்
மும்பை: "எங்கள் ஆட்சியைக் கவிழ்த்தால் மும்பையே பற்றி எரியும் என உத்தவ் தாக்கரே கூறினாரே.. ஆனால் தீக்குச்சி கூட எரியவில்லையே" என மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கிண்டலாகக் கூறினார்.
"என்னைக் கண்டு மகாராஷ்டிரா அரசு பயப்படுகிறது" என உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே கூறியதற்குப் பதிலடி கொடுக்கும் போது, தேவேந்திர பட்னாவிஸ் இவ்வாறு கூறினார்.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசுக்கும், உத்தவ் தாக்கரே சிவசேனா அணிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், உத்தவை சீண்டி பார்க்கும் விதமாக பட்னாவீஸ் பேசியிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் மோதல் போக்கு
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வந்தது. இதனிடையே, சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே, அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். இதன் தொடர்ச்சியாக, சிவசேனாவில் இருந்த பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் சாய்ந்தனர். இதையடுத்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. அது முதலாகவே, அங்கு பாஜகவுக்கும், உத்தவ் அணி சிவசேனாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

சீண்டிய ஆதித்யா தாக்கரே
இதுபோன்ற சூழலில், உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தாக்கரே சமீபகாலமாக மகாராஷ்டிரா அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனிடையே, மும்பையில் கடந்த வாரம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதித்யா தாக்கரே, "சிவசேனாவை முதுகில் குத்திவிட்டு ஏக்நாத் ஷிண்டேவும், பாஜகவினரும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளனர். துரோகம் செய்தவர்களின் வெற்றி நீண்டகாலம் இருக்காது. அவர்களுக்கு சிவசேனா மீது இன்னும் பயம் இருக்கிறது. அவ்வளவு ஏன்.. 32 வயதே ஆன என்னைக் கண்டே அவர்கள் பயப்படுகிறார்கள்" எனக் கூறினார்.

"உங்கள் தந்தைக்கே பயப்பட மாட்டோம்"
இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். அப்போது அவர், "நேற்றைக்கு அரசியல்வாதி ஆனவரான ஆதித்யா தாக்கரே, பாஜக அவரை கண்டு பயப்படுவதாகக் கூறியுள்ளார். அவருக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். உங்களைக் கண்டு அல்ல.. உங்கள் தந்தை உத்தவ் தாக்கரேவை கண்டே நாங்கள் பயப்பட மாட்டோம். ஆட்சி பறிபோன விரக்தியில் ஆதித்யா இப்படியெல்லாம் பேசி வருகிறார். உத்தவ் தாக்கரே முதுகில் பாஜக குத்திவிட்டதாக அவர் கூறுகிறார். யார் முதுகில் யார் குத்தியது என்பது உங்கள் தந்தைக்கு நன்றாகத் தெரியும்"

"தீக்குச்சி கூட எரியவில்லை"
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு உத்தவ் அணி எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் ஆதரவு தந்தனர். அதனால்தான் அவர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார். அதற்கு முன்பு, சிவசேனா ஆட்சி கவிழ்ந்தால் மும்பையே பற்றி எரியும் என உத்தவ் தாக்கரே கூறினார். இப்போது ஆட்சியும் கவிழ்ந்து, புதிய அரசே அமைந்துவிட்டது. அவரிடம் இருந்த 50 எம்எல்ஏக்களை எடுத்துவிட்டோம். ஆனால் மும்பை வேண்டாம்.. ஒரு சிறிய தீக்குச்சி கூட எரியவில்லையே.." என தேவேந்திர பட்னாவீஸ் பேசினார்.












Click it and Unblock the Notifications